காவல்துறை வாகன ஏலத்தில் மகனுக்காக கண்ணீர்விட்ட தாய்! நெகிழ்ச்சியான சம்பவம்!
காவல்துறை வாகன ஏலத்தில் கண்ணீர்விட்ட தாயால் ஏலம் கேட்பதை நிறுத்திய மக்கள்.
வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு அரங்கில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சியில், தன்னுடைய மகனின் வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டாம் என்று தாய் கண்ணீர்விட்டுக் கேட்டுக் கொண்டதால், அவரது வாகனத்தை அவரே ஏலம் எடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தாய் - மகன் பாசத்தைப் பார்த்து பலரும் கண் கலங்கி நின்றனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில், இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று காவல்துறையினரால் பொதுமக்கள் மத்தியில் ஏலம் விடப்பட்டது.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர்.
ஏலத்தில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் தன்னுடைய மகனுடைய இருசக்கர வாகனம் வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனம் இன்று ஏலத்தில் விடப்பட்டதை அறிந்து அங்கு வந்திருந்தார்.
ஏலத்தில் தன்னுடைய மகனுடைய வண்டியை ஏலம் விட்டபோது, இது என் மகனுடைய வண்டி, யாரும் ஏலம் கேட்காதீங்க, எங்க வண்டியை நாங்களே ஏலத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்று மகனுக்காக தாய் எல்லோரும் மத்தியிலும் கைகூப்பி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதனைப் பார்த்த மக்கள் ஏலம் கேட்பதை நிறுத்திவிட்டனர். இதனால், காவல்துறை நிர்ணயித்த விலையிலே தன்னுடைய மகனுடைய இருசக்கர வாகனத்தை தன் மகனுக்காக ஏலத்தில் எடுத்துக் கொடுத்தார் அந்தத் தாய்.
மகனுக்காக கண்ணீர் விட்டு, அவரது வாகனத்தையே அவருக்காக ஏலம் எடுத்துக் கொடுத்த தாய்க்காக எல்லோரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
காவல்துறையினரால் ஏலம் விடப்பட்டபோது வாகன உரிமையாளர்கள் ஏலத்தில் கலந்துகொண்டு கண்ணீர்விட்ட காட்சிகள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.