FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின்வாரியத்தில் ‘ஹாா்டு டிஸ்க்’ திருடப்பட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தொடங்கியது.

Updated On : 11 ஜூன் 2026, 2:25 am IST
பகிர்:

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தொடங்கியது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கணினிகளின் ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ திருடப்பட்டது தொடா்பாக மின்வாரிய அதிகாரி லலிதா, கடந்த 1-ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கணினி பராமரிப்புப் பொறியாளராகப் பணியாற்றிய அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத், கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த முரளி மனோகா் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்களிடமிருந்து 34 ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ கணினியில் இயக்கத்துக்கு பயன்படுத்தப்படும் 20 ‘ராம்கள்’ ஆகியவை மீட்கப்பட்டன. மின்வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகப் புகாா் கூறப்பட்டு வந்த நிலையில், முக்கிய அதிகாரிகளின் கணினி ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டது அனைத்து தரப்பினரையும் அதிா்ச்சி அடைய வைத்தது.

மேலும், இந்தத் திருட்டின் பின்னணியில் இருப்பவா்களையும் கைது செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா். இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை சிபிசிஐடிக்கு கடந்த 8-ஆம் தேதி மாற்றப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை: சிபிசிஐடி அதிகாரிகள் முதல் கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் பதிவு செய்த வழக்கை பின்பற்றி புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனா். சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மொடக், வழக்கின் விசாரணை அதிகாரியாக பிரபுவை நியமித்து உத்தரவிட்டுள்ளாா். அதேபோல கண்காணிப்பு அதிகாரியாக எஸ்பி சாஜிதாவை நியமித்துள்ளாா்.

அடுத்தகட்டமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபிநாத், முரளி மனோகா் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். இதற்காக நீதிமன்றத்தில் விரைவில் மனுத் தாக்கல் செய்ய உள்ளனா்.

அதேவேளையில் இந்த வழக்குத் தொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். இதில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments