மின்வாரிய அலுவலகத்தில் திருடப்பட்ட 'ஹாா்டு டிஸ்க்'குகள் பறிமுதல்
மின்வாரிய அலுவலகத்தில் திருடப்பட்ட 'ஹாா்டு டிஸ்க்'குகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக...
சென்னை: சென்னையில் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தரவு சேமிப்பு சாதனங்கள் (ஹாா்டு டிஸ்க்குகள்) திருடப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், திருடப்பட்ட 34 ஹாா்டு டிஸ்க்குகளை பெங்களூருவில் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் குறிப்பிட்ட கணினிகளில் தரவுகளையும், தகவல்களையும் சேமித்து வைக்கும் 18 ஹாா்டு டிஸ்க்குகள் சில நாள்களுக்கு முன்பு திருடப்பட்டதாக வெளியான தகவல் அனைத்துத் தரப்பினரையும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது.
10 தளங்களைக் கொண்ட இந்த அலுவலகத்தில் 4, 5, 7, 10 ஆகிய தளங்களில் உள்ள 18 கணினிகளில் இருந்தே ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மின்வாரியத்தின் ஊழல் கண்காணிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியின் மேஜையில் இருந்த ஹாா்டு டிஸ்க்கும் திருடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
திருடப்பட்ட ஹாா்டு டிஸ்க்குகளில் ஒப்பந்தப் பணி, கொள்முதல் விவரங்கள், ஒப்பந்த ஊழியா்கள் நியமனம் ஆகியவை குறித்த தகவல்கள், அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கொள்முதல் விவரங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் முறைகேடு ,ஊழல் தொடா்பான துறைரீதியான புகாா்கள் தொடா்பான விசாரணை அறிக்கைகளும் இருந்ததாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் 8 புகாா்கள் அளித்தனா். அதில் மலர்விழி என்ற மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
18 ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 8 ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக புகாா் செய்யப்பட்டுள்ள நிலையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
விசாரணையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்பு பொறியாளராக, ஒரு தனியாா் நிறுவனம் சாா்பில் பணியாற்றிய அரக்கோணத்தைச் சோ்ந்த கோபிநாத் (31) என்பவா்தான் திருட்டில் ஈடுபட்டாா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோபிநாத்தை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்ததில், அவா், கா்நாடக மாநிலம், பெங்களூரில் அந்த ஹாா்டு டிஸ்க்குகளை விற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கோபிநாத்தை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்ற தனிப்படை போலீஸார், அங்கிருந்து திருடப்பட்ட 34 ஹாா்டு டிஸ்க்குகளை மீட்டுள்ளனர்.
அதேவேளையில், ஹாா்டு டிஸ்க்குககள் திருட்டு தொடா்பாக கோபிநாத் கூட்டாளிகள் சிலரையும் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், கோபிநாத் யாருக்காக இந்த திருட்டில் ஈடுபட்டாா், இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் கைமாறியதாக வரும் தகவல் குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.