திருப்போரூரில் 23 -வது அமிர்த வித்யாலயம் பள்ளி தொடக்கம்!
திருப்போரூர் காலவாக்கத்தில் அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 23-வது புதிய பள்ளி தொடக்க விழா பற்றி...
திருப்போரூரில் அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 23-வது புதிய பள்ளி, ஜூன் 11 -ல் தொடங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காலவாக்கத்தில், அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளியின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இராமகிருஷ்ணானந்தபுரி சுவாமிகள் தலைமை தாங்கினார். வினயாம்ரிதானந்தபுரி சுவாமிகள் முன்னிலை வகித்தார்.
Advertisement
Advertisement
விழாவில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் பி. மதன் ராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அமைச்சர் மதன் ராஜாவை மாத்ருகிருபாம்ரித சைதன்யா, பொன்னாடை அணிவித்து வரவேற்றார். விழாவில் அமைச்சருடன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், காலவாக்கம் பஞ்சாயத்து தலைவர் தேவராஜ், காலவாக்கம் கவுன்சிலர் நித்தியானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் சிறப்புரையாற்றுகையில், "மாணவர்களின் எதிர்காலம் கல்வியால் மட்டுமே உருவாக்கப்படும், அத்தகைய சிறப்பான கல்வியை அளிக்க வேண்டியது பெற்றோர் மற்றும் பள்ளியின் கடமையாகும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமிர்த வித்யாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டார்.
பள்ளியின் தாளாளர் ஸ்வாமினி பக்திபிரியாமிர்த ப்ராணா, அமிர்த வித்யாலயம் மைய கல்வி அலுவலர் முரளீதரன், பள்ளி முதல்வர் சித்திரா தேவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.