கும்மிடிப்பூண்டி: அதிக ரத்தப்போக்குடன் குழந்தை அனுமதி! ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பேட்டி
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த குழந்தை குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் விளக்கம்...
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தை, அதிக ரத்தப்போக்குடன் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீன் அரவிந்த் விளக்கமளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பேட்டை பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வாடகை வீடுகளில் தங்கி, அங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் இப்பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரு வீட்டில் 4 வட மாநிலத்தவர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்கள் அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு தருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு படுகாயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பலியானது.
பின்னர் உடற்கூராய்வு முடிந்த நிலையில் பெற்றோரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதுபற்றி ஸ்டான்லி மருத்துவமனை டீன் அரவிந்த் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"குழந்தை மருத்துவமனைக்கு வந்தபோது மிகவும் உடல்நலம் குன்றி இருந்தது. மயக்க நிலையில் இருந்தது. குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் மலம் கழிக்கும் இடம் மிகவும் சேதமடைந்திருந்தது. அதிக ரத்தப்போக்கும் இருந்தது. அதுவும் குழந்தையின் இறப்புக்குக் காரணம்.
உடனடியாக குழந்தைக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7 மணிக்கு குழந்தை உயிரிழந்தது" என்றார்.