பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே அரசின் முதல் லட்சியம்! ஆளுநர்
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றியது பற்றி...
மகளிர் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் முதன்மையான இலட்சியமாகும் என்று பேரவையில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அரசின் குறிப்பில் உள்ளதை எந்த மாற்றமுமின்றி வாசித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உரையாற்றிய ஆளுநர்,
Advertisement
Advertisement
"மிகவும் சவாலான நிதி நெருக்கடியினை தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் வேளையிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்புடன் இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல்வர், முதல் மூன்று உத்தரவுகளாக, நுகர்வோரின் மின் கட்டணத்தினைக் குறைத்திடும் விதமாக அரசிற்கு ஏற்படக் கூடிய 1,730 கோடி ரூபாய் செலவில், இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினை உருவாக்கவும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினை ஆணையிட்டுள்ளார்.
பொது அமைதியை பேணிப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, மகளிர் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் முதன்மையான இலட்சியமாகும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு மிகக் கடுமையான, கண்டிப்பான, விரைவான நடவடிக்கைகள் எடுத்து, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 2,545 புதிய பணியிடங்களுடன், 319 புதிய நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன்களுடன் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பணியினை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கும்" என்று தெரிவித்தார்.