முகப்பு
தமிழ்நாடு

கோவை மக்களுக்கு ஜில்லென்ற செய்தி! முதல் ஏசி பேருந்து நிறுத்தம்; செல்ஃபி பாயிண்ட்!!

கோவை மக்களுக்கு ஜில்லென்ற செய்தியாக, மாவட்டத்தின் முதல் ஏசி பேருந்து நிறுத்தம்; செல்ஃபி பாயிண்ட் திறக்கப்பட்டுள்ளது பற்றி..

Updated On : 12 மார்ச் 2026, 11:38 am IST
குளிர் சாதன பேருந்து நிறுத்தம் - DPS
பகிர்:

கோவை: கோவை மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு 'ஜில்' என்ற தீர்வு என்று காணப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் முதல் ஏசி பேருந்து நிறுத்தம் மற்றும் செல்ஃபி பாயிண்ட் சூலூரில் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சி ஒட்டுமொத்த மாவட்டத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாவட்டத்திலேயே முதன்முறையாக, மக்களின் வசதிக்காக நவீன குளிர்சாதன பேருந்து நிறுத்தம் (AC Bus Shelter) சூலூரில் இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.

Advertisement

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில், மிகவும் நேர்த்தியாகவும் நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிறுத்தத்தை, சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், எல்.ஜி மருத்துவமனைத் தலைவர் கோபிநாத், துணைத் தலைவர் லதா கோபிநாத் மற்றும் ஒன்றிய செயலாளர் மன்னவன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தனர்.

இந்த திட்டம் குறித்து பேரூராட்சித் தலைவர் தேவி மன்னன் பேசுகையில், "தற்போது வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த வெப்பத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதற்கு ஒரு மாற்று வழியை யோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், குளிர்சாதன பேருந்து நிறுத்தத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். அதன் விளைவாகவே இன்று இந்த நவீன வசதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தப் பேருந்து நிறுத்தம் குளிர்சாதன வசதியுடன் மட்டுமல்லாமல், பயணிகளின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெக்லர் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பார்த்திபன் கூறுகையில், இந்தப் பேருந்து நிலையமானது முழுவதுமே உயர்தரக் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இது எளிதில் தீப்பிடிக்காத (Fire-resistant) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று அதன் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, குளிர்சாதன பேருந்து நிறுத்தத்துடன் இணைந்து புதிய 'செல்ஃபி பாயிண்ட்' ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.சூலூர் கட்டடப் பொறியாளர் சங்கத்தினர் மூலம் அமைக்கப்பட்ட இந்த செல்ஃபி பாயிண்டை புலவர் செந்தலை கௌதமன் ஐயா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சங்கத் தலைவர் 'பசுமை நிழல்' விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஒரு பேரூராட்சி நிர்வாகமே முன்வந்து இத்தகைய நவீன வசதிகளைச் செய்து கொடுத்திருப்பது மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

summary

Exciting news for the people of Coimbatore: The district's first AC bus stop; Selfie Point has been opened.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.