ஏசி பெட்டியில் ஊதுபத்தி, விளக்கேற்றி பூஜை.. பயணி கண்டுபிடிக்கப்படுவாரா?
ரயிலின் ஏசி பெட்டியில் மேல் படுக்கையில் விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்தவரால் ரயில் பயணிகள் அச்சம்.
காலையில் எழுந்து குளித்து ஊதுபத்தி ஏற்றிவைத்து, எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி பூஜை செய்வது ஒரு குற்றமா? குற்றம்தான், ஓடும் ரயிலில், ஏசி வகுப்புப் பெட்டியில் அமர்ந்துகொண்டு செய்தால் குற்றம்தான்.
ஏசி பெட்டி முழுக்க புகை, மூச்சு விட முடியாமல் திணறிய பக்தர்கள் மன்னிக்கவும் பயணிகள், இவ்வாறு செய்யக் கூடாது என்று அலறிய போது, தன்னுடைய பூஜையில் இவ்வாறு குறுக்கிடும் இந்த பதர்களுக்கும் நல் வழிகாட்டு என்று அந்த பயணி தன்பாட்டில் பூஜையை தொடரும் விடியோக்களும் புகைப்படங்களும் இன்றும் வைரலாக பேசப்படுகிறது.
சரி விளக்கேற்றினால் எப்படி ரயில் பெட்டி முழுக்க புகைப் பரவும் என்று கேட்கலாம். கேட்க வேண்டும்.. அப்போதுதான் பதில் சொல்ல முடியும். ஆம் அந்த பூஜையில் ஊதுபத்திகளும் ஏற்றப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
ஏசி ரயில் பெட்டியின் மேல் படுக்கையில் அமர்ந்துகொண்டு, ஒரு பக்த பயணி செய்த இந்த பூஜையால் இன்று எல்லோரும் மோட்சத்துக்குத்தான் போவோம் என்று அலறிய பயணிகள், அதனை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டு சமூக வலைத்தளத்தையும் அலற விட்டனர்.
பயணிகள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. மேலும், ரயிலில் புகை வந்தால் கண்டறியும் சாதனம் செயல்படுகிறதா? இல்லையா? ஊத்துபத்தி ஏற்றிய பிறகும், சாதனத்திலிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லையே என்று பல பயணிகள் கேள்வி எழுப்பினர்.
சிலர், பக்த பயணியிடம் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் ஒரு வழியாக தன்னுடைய பூஜையை முடித்துக் கொண்டு, பயணிகளின் அர்ச்சனையை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தயவு செய்து விளக்கை அணைத்து விடுங்கள், ஒட்டுமொத்த பெட்டியும் தீப்பற்றி எரிந்துவிடும் என்று கத்தியும் கூட அவர் கேட்டதாகத் தெரியவில்லை.
இந்த சம்பவம் எப்போது எந்த ரயிலில் நடந்தது என்று தெரியவில்லை. இது குறித்து ரயில்வே சேவா பதிலளித்துள்ளது. உடனடியாக விசாரணை நடத்தி உரியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தயவு செய்து, இந்த ரயிலின் எண், பிஎன்ஆர் எண், விடியோ பதிவிட்டவரின் செல்போன் எண் உள்ளிட்டவற்றை அளித்து உதவி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் நேரடியாக ஒரு புகாரைப் பதிவு செய்யலோம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விடியோ மூலம், ரயில் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.
Train passengers panicked as a man lit incense sticks and a lamp for a puja inside the AC coach.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.