குஷ்புவைத் தொடர்ந்து சுந்தர். சி! மதுரை மத்திய தொகுதியில் போட்டி!
மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுவதாக அறிவிப்பு...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதி உறுதியாகியுள்ளது. வேறொரு தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், "2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர். சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
30.3.2026 திங்கள்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.
இரண்டாவது வேட்பாளரை சென்னையில் திங்கள்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.
குஷ்புவைத் தொடர்ந்து சுந்தர்.சி -யும் அரசியலில் களமிறங்குகிறார். முதல்முறையாக அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சுந்தர். சி அறிவிக்கப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. நடிகர், இயக்குநர், பாடகர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
குஷ்பு, திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து 2020ல் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார்.
கடந்த 2016 முதல் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளது குறிப்பிடத்தக்கது.