தமிழக முதல்வராக விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்! எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
"கடந்த 30 ஆண்டுகளாகவே தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விஜய் நினைத்துக்கொண்டிருந்தார். அந்த எண்ணம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அதனாலே படிப்படியாக அவர் இத்தகைய முன்னெடுப்புகளை செயல்படுத்தி வந்தார். இன்று அவர் தமிழ்நாட்டில் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
Advertisement
தமிழ் மக்கள், விஜய்யை அவரை தலைவராக மட்டும் பார்க்கவில்லை. தலைவராக மட்டும் அன்பு செலுத்தவில்லை. ஒவ்வொரு பெண்ணும் விஜய்யை தனது பேரனாக, மகனாக, சகோதரனாக கருதுகிறார்கள். பெண்கள் அனைவரும் அவரை 'அண்ணா' என்றே அழைக்கின்றனர். மக்களுடனான அவரது உறவை அவர் தொடர்ந்து மேம்படுத்தி வந்தார். அவர் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி தவெக - 100, திமுக - 70, அதிமுக - 64 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.