அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தது குறித்து...
அதிமுகவுடன் கூட்டணியமைக்க கடைசி நிமிடம் வரை தவெக தயாராக இருந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை நீக்கி, 17 மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி நியமித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
Advertisement
”அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வீடுதேடி வந்த தலைவர்களை நீங்கள் தேவையில்லை, நான் வெற்றி பெறுவேன். 210 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என்று சொல்லி, கூட்டணிக்கு வந்த தலைவர்களை விரட்டியடித்த தலைமையை இன்று நாம் பெற்றுள்ளோம்.
அவர்களையெல்லாம் நாம் அரவணைத்து இருந்தால் நாம் வெற்றி பெற்று இருக்கலாம். அதிமுகவுடன் தவெக கூட்டணியமைக்க தயாராக இருந்தபோதும், நாங்களும் கூட்டணி அமைக்கலாம், மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று கூறியபோது, எல்லாம் எனக்குத் தெரியும், நான் பார்த்துக் கொள்கிறேன், அவர்கள் வேண்டாம் என்று இபிஎஸ் கூறினார்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவு. மக்களவைத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தை இன்று வரை சொல்லவில்லை.
யாரையெல்லாம் கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினாரோ அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டனர். தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுக்காததால், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகினார்கள்” என்றார்.