கிளாண்டர்ஸ் தொற்று: தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு
தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
கிளாண்டர்ஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகளைத் தாக்கும் ஒரு வகையான தொற்று. பர்கோல்டெரியா மலேய் எனும் பாக்டீரியா நுண்ணியிரியால் பரவுகிறது.
Advertisement
குதிரை மற்றும் கழுதைகளுக்கு இடையே மிக வேகமாக பரவக் கூடியது. அந்த பாதிப்புக்குள்ளான விலங்குகளின் உடல் முழுவதும் கழலைக் கட்டிகள் (கிளாண்ட்) உருவாகும் என்பதால் இதற்கு கிளாண்டர்ஸ் நோய் என்று பெயர்.
தொற்றுக்குள்ளான விலங்குகளிடம் நேரடித் தொடர்பில் இருப்பவர்களுக்கு கிளாண்டர்ஸ் நோய் பரவும் வாய்ப்புள்ளது. விலங்கின் புண்களில் இருந்து வெளியேறும் திரவம் மனிதர்களின் தோலில் நேரடியாக படுவதால் தொற்று பரவும். தொற்றுக்குள்ளான குதிரை, கழுதைகளின் கண்ணீர், சளி, உமிழ் நீரிலிருந்தும் பரவும். அவை இருமும் போதும், கணைக்கும் போதும் அதில் இருந்து வெளியேறும் நீர்த் திவலைகளை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது.
இதனால், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகள், உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு உள்ள குதிரையை சவாரிக்கு பயன்படுத்தக் கூடாது என்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.