முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸை எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி

திமுக இளைஞர் அணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
பகிர்:

சென்னை : காங்கிரஸை எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 23) மாலை நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் உள்பட கழக இளைஞர் அணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

அதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மீதும், கட்சித் தலைவர் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும், ஜூன் - 3இல் கலைஞர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுதல் என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனத் தீர்மானம் என்று நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் :

“மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும், பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டுக்குள் விட்டுவிடக் கூடாது என்று நம் தொண்டர்கள், நாம் இரத்தத்தையும், வேர்வையையும் சிந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்துக்கொண்டு இருந்தோம். இந்தத் தேர்தலிலும் அதைத்தான் செய்தோம்.

களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி, இன்று ஐந்து இடத்தில் ஜெயிக்க நம் உடன்பிறப்புகள், நம் தலைவரின் தொண்டர்கள், தி.மு.க.காரன்தான் காரணம். இன்று நம் தலைவர் முதல்வராக வேண்டும் என்று மக்கள் போட்ட ஓட்டில் ஜெயித்துவிட்டு, பதவிக்காகச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டார்கள்.

குறைந்தபட்சம் ஒரு நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரஸை, இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக்கூடாது. எந்தக் காலத்திலும் நாம் அவர்களை கிட்டே சேர்க்கக் கூடாது. அவர்களுக்குச் சரியான பாடத்தை, நாம் கற்றுக் கொடுக்கிறோமோ இல்லையோ தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் வெகு விரைவில் கற்றுக் கொடுப்பார்கள்.

இந்தச் சூழலில் இளைஞர் அணி தம்பிமார்கள், சகோதரர்கள் உங்களிடமெல்லாம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், நாம் ஏற்கனவே செய்த பணிகளை இன்னும் வேகமாகச் செய்வோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வளவு நாட்களாக உழைப்பை அள்ளிக் கொடுத்த உங்களை நம் கழகத் தலைவர் அவர்கள் நிச்சயம் கைவிட மாட்டார். நானும் எப்போதுமே உங்களுடன்தான் இருப்பேன். உங்களோடு தோளோடு தோள் நிற்பேன்” என்றார்.

summary

DMK Youth Wing meet: Udayanidhi Stalin tweets about DMK plans for future

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.