இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளர்களை அறிவிப்போம்: அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி குறித்து...
இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளர்களை அறிவிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
எதிர்க்கட்சியில் உள்ள 4 சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்து, உடனடியாக ஆளுங்கட்சியான தவெகவில் இணைத்துக் கொண்டது ஜனநாயகப் படுகொலை.
Advertisement
Advertisement
இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம், முதல்வர் விஜய் நேர்மையான முறையில் ஆட்சியைத் தருகிறோம் என்று உறுதியேற்று 3 வாரங்களாக, திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த நேரத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை, வெற்றிபெற்ற 20 நாள்களில், அதுவும் சொல்லப் போனால், என் விரலில் உள்ள மை இன்னும் போகவில்லை. இந்தச் சூழலில் ராஜிநாமா செய்யப்பட்டு ஆளுங்கட்சி தவெகவில் இணைத்துள்ளார்கள்.
இது ஒரு மோசடி, குதிரை பேரத்தைவிட மோசமானது. தமிழகத்தில் தேவையில்லாத இடைத் தேர்தல் இது. எதிர்வரும் இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்கள் படுதோல்வி அடைவார்கள். எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளர்களை அறிவிப்போம். அந்தச் சூழலுக்கு எங்களைத் தள்ளாதீர்கள்.
பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது; முதல்வர் விஜய் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
இதையெல்லாம் எவ்வாறு முதல்வர் விஜய் அனுமதிக்கிறார்? பதவி விலகிய 4 பேரும் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது” என்றார்.