திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 30ஆம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை (மே 28) முதல் மே 31 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு ரூ. 100 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வைகாசி விசாகத் திருவிழா 10 நாள் வசந்தத் திருவிழாவாக கடந்த மே 21ஆம் தேதி தொடங்கியது. 5ஆம் நாளான திங்கள்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பகலில் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
Advertisement
Advertisement
மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து, தங்க ரதத்தில் கிரி வீதி உலா வந்தார். மே 29ஆம் தேதிவரை இதே நிகழ்ச்சிகள் நடைபெறும்.
10ஆம் நாளான 30 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனையாகிறது.
பின்னா், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபம் சோ்கிறார். கோயிலில் சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு வசந்த மண்டபத்தில் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனி குமாரா்களுக்கு சாப விமோசனம் அளித்தலும் நடைபெறும்.
வைகாசி விசாகத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.