தில்லியில் முதல்வர் விஜய்! தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை மரியாதை!
தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு தில்லியில் காவல்துறை மரியாதை...
தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி சென்றுள்ள ஜோசப் சி. விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக தில்லி சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சென்ற விஜய்யை, தில்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து, தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய்க்கு, தில்லி திகாா் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
மாலை 4.30 மணியளவில் பிரதமா் மோடியை முதல்வா் விஜய் சந்தித்துப் பேச உள்ளாா். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்துவாா் என்று கூறப்படுகிறது.
இரு நாள் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சிக்கிம் சென்றுள்ளதால் மே 28-ஆம் தேதி அவா் தில்லி திரும்பிய பிறகு முதல்வா் விஜய் அவரை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாா்.
இதனிடையே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா உள்ளிட்டோரையும் விஜய் சந்திக்கவுள்ளார்.
இருநாள்கள் பயணத்தை முடித்துவிட்டு, நாளை மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.