குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆளுநரைச் சந்தித்த பின் அதிமுக நிர்வாகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி
தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது என ஆளுநரைச் சந்தித்த பின் அதிமுக நிர்வாகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்லேகரை அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனபால் எம்.பி. ஆகியோர் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை வழங்கியுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். தவெக அரசில் குதிரை பேரம் நடப்பதாக அதிமுகவினர் ஏற்கெனவே குற்றம்சாட்டி வரும் நிலையில் அதுகுறித்த புகார் மனு ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
"குதிரை பேரத்தின் மூலமாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைபேசிக் கொண்டிருக்கின்ற தவெக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.
அரசியலமைப்புச் சட்ட விதி 167ன் கீழ் தவெக அரசின் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம் தவெக அலுவலகம் மாறிவிட்டது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே தனபால் எம்.பி., தவெகவில் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல் வந்துள்ளது என்றும் ஜனநாயகத்தைக் காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.