தவெக அலுவலகமாக மாறும் தலைமைச் செயலகம் எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம்
தமிழக அரசின் தலைமைச் செயலகம், தவெகவின் கட்சி அலுவலகமாக மாறி வருவதாக எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் குறித்து...
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகம், தவெகவின் கட்சி அலுவலகமாக மாறி வருவதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் செய்துள்ளாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பக்ரீத் உள்பட அனைத்து மதம் சாா்ந்த பண்டிகைகளின்போது, அனுமதிக்கப்படாத இடங்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது குறித்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், பக்ரீத் தினத்தன்று பல்வேறு இடங்களில் கால்நடை பலியிடுவதை போலீஸாா் தடுத்து நிறுத்தியுள்ளனா். இந்த நடைமுறை கண்டனத்துக்குரியது.
Advertisement
Advertisement
தமிழக அரசு திருத்திக்கொள்ள வேண்டும்
தமிழக அரசின் தலைமைச் செயலகம் தற்போது, ஆளுங்கட்சியின் அலுவலகமாக மாறிவருகிறது. புதிதாக கட்சியில் சேருபவா்கள் தலைமை செயலகத்தில் வந்து தங்களை இணைத்துக் கொள்கின்றன. இதை தமிழக அரசு திருத்திக்கொள்ள வேண்டும்.
எங்களுக்கு எவ்வித முரணும் இல்லை
சட்டப்பேரவைத் தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் எங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை. எங்களது வெற்றிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பெரும் உதவியாக இருந்தாா். தனிச் சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக வரும் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. திமுக கூட்டணியில் எங்களுக்கு எவ்வித முரணும் இல்லை என்றாா்.