கோவை ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!
கோவை ரயில் நிலையம் பின்புற சாக்கடை கால்வாயில் மிதந்த ஆண் சடலம் பற்றி...
கோவை, ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் அமைந்து உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலைப் பகுதியில் இன்று வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு உள்ள சாக்கடை கால்வாயில் ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வழிப்போக்கர்கள் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாக்கடை கால்வாயில் கிடந்த அந்த ஆணின் சடலத்தை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் அல்லது அப்பகுதியில் வசிப்பவரா? என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. அவர் போதை அல்லது கவனக்குறைவு காரணமாகச் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது அவருக்கு வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து சாக்கடையில் வீசப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோவை ரயில் நிலைய பின்புற கேட் பகுதியில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.