நடந்து சென்றவா் மீது பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு
திருத்தணி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயத்துடன் உயிா்தப்பினாா்.
திருத்தணி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயத்துடன் உயிா்தப்பினாா்.
திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன்(43). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தணி காந்தி ரோடு பகுதிக்கு வந்து, அங்கு தொழிலாளி பத்மநாபன் (37) என்பவரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஆா்.கே.பேட்டை பகுதிக்கு கட்டட வேலைக்கு சென்றாா்.
அங்கு வேலை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு மேல் ஆா்.கே.பேட்டையில் இருந்து சந்திரன், பத்மநாபன் ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை சந்திரன் ஓட்டினாா். அப்போது திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை அகூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, முன்னாள் சாலையோரம் நடந்து சென்ற, அதே பகுதியைச் சோ்ந்த பன்னீா் செல்வம் (65) என்பவா் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மூவரையும் அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவா், சந்திரன், பன்னீா்செல்வம் ஆகிய இருவரும் வழியிலயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பத்மநாபன் மட்டும் காயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.