பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் உயர்வு, நிஃப்டி சரிவு!
பங்குச்சந்தை வணிகத்தின் சென்செக்ஸ் உயர்வுடம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சரிவுடன் முடிந்தது.
பங்குச்சந்தை வணிகம் இன்று (ஜூன் 19) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சரிவுடன் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36.45 புள்ளிகள் உயர்ந்து 77,337.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.047 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.30 புள்ளிகள் சரிந்து 23,521 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.15 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் 77,543 புள்ளிகளுடன் பங்குச்சந்தை வணிகம் தொடங்கிய நிலையில், 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,851 என்ற உச்சத்தை அடைந்தது. பின்னர் சரியத் தொடங்கி இறுதியில் 77,337 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.
பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 15 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 15 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. குறிப்பாக எல்&டி, சர் பார்மா, ரிலையன்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
அதிகபட்சமாக எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 5.32 சதவீதம் உயர்வுடன் காணப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக எம்&எம் நிறுவன பங்குகள் 5.25 சதவீதமும், விப்ரோ 3.95 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 3.26 சதவீதமும், இந்தஸ்இந்த் பங்குகள் 2.96 சதவீதமும் உயர்வுடன் காணப்பட்டன.