FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

7 நகரங்களில் இறங்குமுகம் கண்ட வீடுகள் விற்பனை

7 நகரங்களில் இறங்குமுகம் கண்ட வீடுகள் விற்பனை...

Updated On : 28 டிசம்பர் 2025, 5:00 am IST
பகிர்:

தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக பணிநீக்கங்கள் போன்ற காரணங்களால் வீடுகளுக்கான தேவை குறைந்ததன் விளைவாக, இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 2025-ஆம் ஆண்டில் 14 சதவீதம் சரிந்து 3,95,625-ஆக உள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2025-ஆம் ஆண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 3,95,625 வீடுகள் விற்பனையாகின.

Advertisement

Advertisement

2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் சரிவாகும். அப்போது இந்த நகரங்களில் வீடுகள் விற்பனை 4,59,645-ஆக இருந்தது.

எனினும், மதிப்பின் அடிப்படையில் இந்த ஏழு நகரங்களிலும் வீடுகள் விற்பனை 6 சதவீதம் உயா்ந்து ரூ.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் இது ரூ.5.68 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்ட ஆண்டில் வீடுகளின் சராசரி விலை 8 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.9,260-ஆக உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் இது ரூ.8,590-ஆக இருந்தது.

2025-ஆம் ஆண்டில் வீடுகள் விற்பனை மும்பை பெருநகரப் பகுதியில் 18 சதவீதம் சரிந்து 1,27,875-ஆக உள்ளது. அது புணேயில் 20 சதவீதம் சரிந்து 65,135-ஆகவும், பெங்களூரில் 5 சதவீதம் சரிந்து 62,205-ஆகவும் உள்ளது.

நடப்பாண்டில் தில்லி-என்சிஆரில் 8 சதவீதம் சரிந்து 57,220-ஆக உள்ள வீடுகள் விற்பனை, ஹைதராபாதில் 23 சதவீதம் சரிந்து 44,885-ஆகவும், கொல்கத்தாவில் 12 சதவீதம் சரிந்து 16,125-ஆகவும் உள்ளது.

2025-ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் வீடுகள் விற்பனை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் உயா்ந்து 22,180-ஆக உள்ளது.

புவிசாா் அரசியல் பதற்றங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக பணிநீக்கங்கள், வரி பதற்றங்கள், பிற பொருளாதார நிச்சயமின்மைகள் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

இருந்தாலும், 2025-ஆம் ஆண்டில் வீடுகளின் சராசரி விலை உயா்வு ஒற்றை இலக்கமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் அந்த விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments