விரைவில் அறிமுகமாகும் எலக்ட்ரிக் டாடா சியரா! என்னென்ன எதிர்பார்க்கலாம்?
விரைவில் அறிமுகமாகவுள்ள எலக்ட்ரிக் டாடா சியரா காரை பற்றி...
இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார் பிரியர்களின் விருப்பத்துக்கேற்ற வகையில், டாடாவின் சியரா கார் எலக்ட்ரிக்கில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தைக் கொண்டுள்ள டாடா நிறுவனம், நீண்ட காலமாகவே கார் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகிறது.
டாடாவின் தயாரிப்பில் சமீபத்தில் டாடா சியரா கார் வெளியாகி குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்தாண்டு நவம்பரில் அறிமுகமான இந்த காரின் விலை ரூ. 11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த நிலையில், இந்த காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான நான்கு மாதங்களில் 20,000 கார்கள் வரை விற்பனை ஆகியுள்ள நிலையில், டாடா ஹாரியர், டாடா கர்வ்க்கு இடையிலான இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, மாருதி இ விட்டாரா, மஹிந்திரா பிஇ6 உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாகவும் களத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய டாடா சியரா மாடலில் இருக்கும், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், 12 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவைகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும், சுமார் 55 கிலோவாட் ஹவர் மற்றும் 65 கிலோவாட் ஹவர் அளவிலான இரண்டு பேட்டரிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மஹிந்திரா பிஇ6 போன்ற கார்களில் அதிக பேட்டரி திறன்களை வழங்குவதால், ஹாரியர் இவியில் வழங்கப்பட்டுள்ள 75 கிலோவாட் ஹவர் பேட்டரிகூட வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.