ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!
இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு 20 காசுகள் மீண்டு ரூ.93.15ஆக நிறைவு.
மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையின் மத்தியில், கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், டாலர் பலவீனமடைந்திருப்பதால், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு 20 காசுகள் மீண்டு ரூ.93.15 என்ற நிலையில் நிறைவடைந்தன.
ஈரானுடன் 2ஆம் கட்டப் பேச்சுவார்த்தை, அடுத்த இரண்டு நாட்களுக்குள் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, முதலீட்டாளர்களின் மனநிலை சாதகமாக மாறியது.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இரு தரப்பினரும் முயற்சியை தொடர்ந்ததையடுத்து, கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.19 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகு வலுவடைந்து, காலை நேர வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூ.93.15 என்ற நிலையில் வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவில் இருந்த நிலையை விட 20 காசுகள் அதிகம்.
நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.93.35 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நியச் செலாவணிச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.