பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு! ஏன்?
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 3) கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,507.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 801.42 புள்ளிகள் குறைந்து 73,848.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.20 புள்ளிகள் குறைந்து 23,259.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் 30 பங்குகளில் அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மட்டும் உயர்ந்தும் இதர நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி 50 பங்குகளில் டிசிஎஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.67 சதவீதம், 0.48 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி குறியீடு 4% -க்கும் அதிகமாக சரிவைச் சந்தித்தது. நிஃப்டி பொதுத்துறை, தனியார் வங்கிகள், பார்மா, மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி உலோகப் பங்குகள் மட்டும் சற்றே உயர்ந்து வர்த்தகமாகின்றன.
கச்சா எண்ணெய் 0.88 சதவீதம் உயர்ந்து 96.84 டாலராக உள்ளது.
வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து 95.47 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, ஐடி பங்குகள் சரிவு, வெளிநாட்டு பங்குகள் அதிக வெளியேற்றம், ஆர்பிஐ கொள்கைகள் மீதான எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது.