பங்குச் சந்தை சரிவு எதிரொலி: ஒரே நாளில் ரூ. 6.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 6.31 லட்சம் கோடி குறைந்தது.
புதுதில்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் விற்பனை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைக் குறியீடுகள் வெகுவாக சரிந்தன. இதன் விளைவாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 6.31 லட்சம் கோடி குறைந்தது.
தொடர்ந்து 2வது நாளாகச் சரிந்த சென்செக்ஸ் 719.08 புள்ளிகள் சரிந்து 73,524.26 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 243.70 புள்ளிகள் சரிந்து 23,123 புள்ளிகளாக நிலைபெற்றது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் உலகளாவிய சந்தை பலவீனமடைந்ததது. அதே வேளையில், கச்சா எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற நிலையை நோக்கி பயணித்தது.
Advertisement
Advertisement
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பப் பங்குகளின் ஏற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியதால் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் விற்பனைக்கு உள்ளாகின.
இதனையடுத்து, ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 6,31,440.41 கோடி குறைந்து ரூ. 4,55,28,758.96 கோடியாக உள்ளது.