FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கவிதைமணி

ஆட்டுக் குட்டியை நனைத்த மழை வாசகர் கவிதை பகுதி 3

அன்பான குட்டி ஆடே; ஓடிப்போய் ஒட்டிக் கொள்ளேன் உன் அன்னை ஆட்டை!

Updated On : 3 ஜூலை 2019, 10:00 am IST
பகிர்:

ஆட்டுக் குட்டியை நனைத்த மழை!

‘மழை நனைத்த ‘மா’ நிலமாய் பரந்து விரிந்த பூமிதனில்
நடுங்கி நிற்கும் குட்டி ஆடே; உன் அன்னை ஆட்டை எங்கே காணோம்?
சுக்குப்பால் தட்டிப்போட்டு கொஞ்சம் குடிக்கத் தரச் சொல்லி கத்தேன்;
ஆட்டுப்பாலும் அரைப்படி கடலையும் மென்று தின்ற காந்தித் தாத்தா
கைராட்டை சுற்றிக் கொண்டே வாஞ்சை காட்டி அருகழைத்து
அகத்திக் கீரை தின்னத் தருவார்;
ஒரே ஒரு இந்தியா, ஒரே ஒரு ஒற்றைக் காந்தி!
அகத்திக் கீரை நீட்டுபவரெல்லாம் காந்தியென்று நம்பி விடாதே;
கழுத்தறுக்கும் கோஷ்டி ஒன்று கடவுள் பெயர் சொல்லி அலையுது
கிடாவெட்டும் சாக்கில் நாக்கைப் பட்டை தீட்டும் வேலை நடக்குது
அன்பான குட்டி ஆடே; ஓடிப்போய் ஒட்டிக் கொள்ளேன் உன் அன்னை ஆட்டை!
இளஞ்சூட்டு மடி அணைத்து ஒட்டி நின்று காத்துக் கொள்’
கொலை வாள் காத்திருக்குது நேரம் காலம் கூடி வர;
அதற்குள்;
மழை நனைந்த மாந்தளிரே இலையுதிரேன் ஆடு தின்ன;
மழை நனைந்த பசும்புல்லே செழித்து வளரேன் ஆடு தின்ன’
மழை நனைந்த மாமனிதா கொஞ்சம் பொறு ஆட்டைத் தின்ன!’

- கார்த்திகா வாசுதேவன்

Advertisement

Advertisement

கொடுமையிலும் கொடுமையாகக் கூடிவெயில் வாட்டிடும் !
கடுமையிலும் கடுமையாகக் காய்ந்தெரித்தே சுட்டிடும் !

செடிகொடியும் மரங்களுமே செத்ததுபோல் நின்றிடும் !
அடிவேரும் அற்றதுபோல் அருகம்புல் காய்ந்திடும் !

நீர்நிலைகள் எல்லாமும் நீரின்றிக் நெகிழ்ந்திடும் !
வேர்விட்டத் தாவரங்கள் விழிக்குருடாய் வீழ்ந்திடும் !

ஆடுமாடு எல்லாமும் அரும்பசியால் அலைந்திடும் !
காடுகழனி எல்லாமும் காணாமல் கருகிடும் !

சோலையிலே பூக்களெல்லாம் சுருங்கிக்கீழ் வீழ்ந்திடும் ! 
பாலையாகிச் சோலையெலாம் பார்த்துமனம் வாடிடும் !

சிற்றூரில் பேரூரில் திகைக்கின்றார் நீரின்றி !
பற்றுள்ளார் நீர்வாங்கப் பணமிருந்தும் நீரின்றி !

நீரில்லா உலகத்தில் நிலைத்தெந்த உயிர்வாழும் ?
நீரில்லேல் எப்பணிதான் நிலையாக நடந்தேறும் ?

முப்பங்கு நீரிருந்தால் முன்னேற்றம் கிட்டிடுமா ?
உப்பான நீரதனால் உயிர்த்திடுமோ மன்னுயிர்கள் ?

காடழித்து நாடாக்கிக் களித்திருந்தோம் மழையில்லை !
நாடகந்தான் காடாகின் நமக்கேது நல்லநிலை ?

அடடடடா வானந்தான் அழுகிறதே பார்த்தெல்லாம் !
உடனிருந்த ஆட்டுக்குட்டி ஓடிமழை நனைந்தபடி !

மரங்களினை வெட்டிவிட்டோம் மரச்செடிகள் நட்டிடுவோம் !
உரம்நீரும் அதற்கிடுவோம் உயிராக நாம்காப்போம் !

மரம்வளர்ப்போம் மழைபெறுவோம் மண்ணகத்தை மலர்விப்போம் !
மரமாக நாமிருப்போம் மன்னுயிர்த்தே நிலைநிற்போம் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

பசுமை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments