யுபிஎஸ்சி: குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல்!
குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் பற்றி...
குடியுரிமை
சிட்டிசன் எனும் சொல் சிவிஸ் எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ஒரு நகர அரசில் வசிப்பவர் என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பின் பகுதி II சட்டப்பிரிவுகள் 5-லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.
குடியுரிமைச் சட்டம் (1955)
Advertisement
Advertisement
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, 1955-ல் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது. இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தால் ஒன்பது முறை திருத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை பெறுதல்
குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி ஒருவர் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் குடியுரிமை பெற முடியும்.
1. பிறப்பின் மூலம்
2. வம்சாவளி மூலம்
3. பதிவின் மூலம்
4. இயல்புரிமை மூலம்
5. நாடுகள் இணைவின் மூலம்
பிறப்பின் மூலம்
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.
வம்சாவளி மூலம்
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை (அவர் பிறந்தபோது) இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர், வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.
பதிவின் மூலம்
ஒருவர் இந்தியக் குடியுரிமைக் கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
இயல்புரிமை மூலம்
ஒரு வெளிநாட்டவர், இந்திய அரசிற்கு இயல்புரிமை கோரி விண்ணப்பிப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
நாடுகள் இணைவின் மூலம்
பிற நாடுகள்/ பகுதிகள் இந்தியாவுடன் இணையும்போது, இந்திய அரசு அவ்வாறு இணையும் நாடுகளின் மக்களைத் தமது குடிமக்களாகக் கருதி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம்.
குடியுரிமையை இழத்தல்
குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி, ஒருவர் தன் குடியுரிமையை சட்டத்தின் மூலமாக பெறப்பட்டதாகவோ அல்லது அரசியலமைப்பின் கீழ் முன்னுரிமையால் பெறப்பட்டதாகவோ இருக்கும் பட்சத்தில் பெற்ற குடியுரிமையைத் துறத்தல், முடிவுறச் செய்தல், இழந்தல் என்ற பின்வரும் மூன்று வழிகளில் இழப்பார்.
1. ஒரு குடிமகன் தாமாக முன்வந்து தனது குடியுரிமையை துறத்தல்
2. வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும்போது தாமாகவே இந்தியக் குடியுரிமை முடிவுக்கு வந்துவிடுதல்
3. இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற குடிமகன், மோசடி செய்து குடியுரிமை பெற்றவர், தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் அல்லது உண்மைகளை மறைத்தவர் அல்லது எதிரி நட்டுடன் வாணிகம் செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் என்பதை நடுவண் அரசு கண்டறிந்து அவர் குற்றம் புரிந்தவர் என்று திருப்திப்படும் பட்சத்தில் நடுவண் அரசு, அவரது குடியுரிமையை இழக்கச் செய்யும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.