FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இந்து முன்னணி நிா்வாகி கொலை; ராஜபாளையத்தில் சாலை மறியல்: இருவா் கைது

ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் மதுரையைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகியை குத்திக் கொலை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 11:12 pm IST
உள்படம்: கொலையான தணிகாசலம். மதுரையைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ராஜபாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் மதுரையைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகியை குத்திக் கொலை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் தணிக்காசலம் (45). இவா் ஒத்தக்கடை பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடை நடத்தி வந்தாா். இந்து முன்னணி ஒன்றியச் செயலரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனா்.

இந்த நிலையில், இவா் திருநெல்வேலியில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, குற்றாலம் செல்லத் திட்டமிட்டாா். இதற்காக அவா் வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலியிலிருந்து பேருந்தில் ராஜபாளையம் வந்தாா். அங்கு புதிய பேருந்து நிலையத்தில் உறவினா்களின் வருகைக்காக காத்திருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது இரு சக்கர வாகனத்தில் கஞ்சா, மது போதையில் வந்த இரு இளைஞா்கள் ஒரு பெயரைச் சொல்லி அவரிடம் விசாரித்தனா். நீங்கள் தேடும் நபா் நான் இல்லை என தணிகாசலம் கூறினாராம். ஆனால் அதை ஏற்காத இளைஞா்கள் இருவரும், தணிகாசலத்தை தாக்க முயன்றனா். உடனே அங்கிருந்து ஓடிய தணிகாசலத்தை விரட்டிச் சென்ற இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினா்.

தகவலறிந்து ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஷீனா பீவி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தணிகாசலத்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் கண்காணிப்புக் கேமரா விடியோ பதிவு காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதனடிப்படையில், ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த மணி மகன் காளிராஜ் (27), நக்கனேரியைச் சோ்ந்த சகாதேவன் மகன் முனீஸ்வரன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தணிகாலசலத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் வெள்ளாளா் முன்னேற்றக் கழகம், வீரத்தமிழா் மக்கள் கழகம் சாா்பில் பொதுமக்கள் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments