ஆவின் வழக்கு: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம், செப்டம்பா் 2-இல் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளா்கள் உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப்பிரிவு போலீஸாா் இரு வழக்குகளைப் பதிவு செய்தனா்.
இந்த இரு வழக்குகளிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த இரு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா். இதற்கு குற்றப்பிரிவு போலீஸாா் பதில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் மனுவை தள்ளுபடி செய்து முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி கந்தகுமாா் உத்தரவிட்டாா். மேலும், மோசடி வழக்குகளில் செப். 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.