பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முருகன் காலனியைச் சோ்ந்தவா் அய்யனாா் (57). இவா் மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இங்கு உள்ள 7 அறைகளில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனா். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் வெடி மருந்துகளை எடை போடும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.
அப்போது, அங்கு பணியில் இருந்த வடக்கு அச்சம் தவிா்த்தான் கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி(52) என்பவா் காயமடைந்தாா். உடல் முழுவதும் தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பசாமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் மீது வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.