ஆச்சரியங்களும் பல வியப்புகளையும் நிறைந்திருக்கும் நம்நாட்டில், ஒரே ஒரு ரயிலில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் இலவச உணவு பரிமாறப்படுகிறது என்பதும் ஒன்றாக உள்ளது.
ஒரு சமூக மக்களின் தன்னார்வலர்களால், தங்கள் மாநிலத்துக்குள் வரும் ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும், சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் நல்ல சத்தான காய்கறிகளைக் கொண்ட உணவு வழங்கப்படுகிறது. அந்த ரயில் சச்கந்த் விரைவு ரயில். மகாராஷ்டிரத்தின் நன்டட் பகுதியிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிருதசரஸை இணைக்கும் இந்த ரயிலில்தான் பல பத்தாண்டு கால சேவை மனப்பான்மையின் பாரம்பரியம் இன்றளவிலும் தொடர்கிறது.
சீக்கிய மதத்தினரின் மிக முக்கிய வழிபாட்டுத் தலங்களாக ஹசூர் சாஹிப் மற்றும் பொற்கோவிலை இணைக்கும் வகையில் சுமார் 2,000 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படுகிறது. எந்தக் கட்டணமும் இன்றி, பயணிகள் இருக்கும் இடத்துக்கே அவர்களுக்கான உணவு வந்தடைகிறது.
இந்த உணவை வழங்குவது ரயில்வே அல்ல. ஒரு சமூக மக்களின் தன்னார்வலர்களால் இயங்கும் அமைப்பு. குருத்வாரா மற்றும் தன்னார்வ அமைப்புகளால் உணவு தயாரிக்கப்படுகிறது. ரயில் நிலையங்கள் அல்லது அருகில் உள்ள குருத்வாராக்களில் மிகப்பெரிய அளவில் உணவு தயாரிக்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டு, ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது உணவு வழங்கப்படுகிறது.
நன்டட், போபால், புது தில்லி போன்ற மிகப்பெரிய ரயில் நிலையங்களில், தன்னார்வலர்கள் ரயிலுக்குள் ஏறி, பயணிகளுக்கு உணவுகளை வாங்குவார்கள். அதில், கிச்சடி, பருப்பு, ரொட்டி, காய்கறிகள் என சீரான உணவு இருக்கும். ஒவ்வொரு நாள் உணவு மெனுவும் அந்தந்த நாளுக்கும் பருவத்துக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. நம்பிக்கையுடன் செய்யப்படும் சேவைக்கு இது மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.
அது மட்டுமல்ல, ரயிலின் அனைத்துப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும், எந்த மத, இன வேறுபாடின்றி உணவு வழங்கப்படுகிறது. உணவு பரிமாறப்படும்போது, ரயிலில் பயணிக்கும் அனைவரும் ஒன்றாக இணைந்து உணவருந்துகிறார்கள். அது அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் அதிகரிக்கிறது.
இந்தியாவிலேயே, பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் ஒரே ரயிலாக சச்கந்த் அமைந்துள்ளது. ஒவ்வொரு மத அமைப்புகளும், தன்னார்வலர் குழுக்களும் இணைந்து, இந்த சமுதாயத்தின் தேவையை தீர்ப்பதில் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை பறைசாற்றுவதாக, உணவு வழங்கப்படுவது பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, இந்த ரயிலில் பயணித்து, தன்னார்வலர்கள் கொண்டு வரும் உணவு கிடைக்கப்பெற்றவர்கள், இதுபோன்ற ஒரு சேவையை செய்து வருபவர்களுக்கு நிச்சயம் தங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ள தவறுவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.