இனி பி.எஃப். பணம் எடுப்பது எளிது! வருகிற 3.0 புதிய விதிமுறை!
இனி பி.எஃப். பணத்தை முழுமையாக அல்லது குறிப்பிட்டத் தொகையை பெறுவது எளிமையாக்கப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பாது, வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகளை மிக விரைவாக செயல்படுத்தும் நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, வருங்கால வைப்பு நிதியை முழுமையாக அல்லது அவசரத் தேவைக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
இது தொடர்பான சோதனை நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்று விரைவாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரவிருப்பதாக மத்திய தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது, வேறு பணிக்கு மாறும்போது பி.எஃப். தொகையை பணியாளர்கள் மிக விரைவாகப் பெறலாம். ரூ.5 லட்சம் வரை இருக்கும் பி.எஃப். பணம், தொழிலாளர்களின் யுஏஎன் அளித்தாலே கிடைத்துவிடும். ஆதார் - பான் - வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட விவரங்களை அளித்ததும், 95 சதவிகித பிஎஃப் கணக்குகளில் இருக்கும் தொகை நேரடியாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முன்பு பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால்..
நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமோ பணம் கோருவதற்கான படிவத்தை அளிக்க வேண்டும்.
தொழிலாளர் பணியாற்றும் தொழில் நிறுவனத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.
பணம் கிடைக்க 7 - 15 நாள்கள் நடைமுறை இருக்கும்.
படிவத்தில் பிழைகள் இருந்தால் மீண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கழக அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் புதிய விதிமுறைப்படி, சில வினாடிகளில் பணம் எடுக்கலாம்.
அவசரத் தேவைக்கு, குறிப்பிட்டத் தொகையை எடுப்பதற்காக இதுவரை இருந்த 13 விதிகளை ஒன்றிணைத்து 3 பிரிவுகளாக மாற்றி எளிமைப்படுத்தியிருக்கிறார்கள்.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து, தொழிலாளர்கள் அவசரத் தேவைக்காக பணம் எடுக்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை. இதன் மூலம் எங்குமே அலையாமல் ஆன்லைன் மூலம் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம் என்கின்றன தகவல்கள்.
இது தொடர்பான என்பிசிஐ விடுத்திருக்கும் பரிந்துரைக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது.
இந்த ஜூன் மாத இறுதிக்குள், வருங்கால வைப்பு நிதி வைத்திருக்கும் தொழிலாளர்கள், தங்களது பிஎஃப் தொகையிலிருந்து ரூ.1 லட்சத்துக்குக் குறைவான தொகையை யுபிஐ வசதி அல்லது ஏடிஎம் வசதி மூலம் எடுக்கும் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும் யுபிஐ மூலமாகவே பார்த்துக் கொள்ளலாம். தங்களுக்குத் தேவையான தொகையை விரும்பும் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் வருகிறது.
இதுநாள்வரை, பிஎஃப் தொகை அவசரத் தேவைக்காக எடுக்கும் வசதியைப் பெற தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். ஆனால்,இனி அந்த நிலை மாறும் என்றும், தேவையான தொகையை மிக எளிதாகவே பெற முடியும் என்பதால் தொழிலாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இது மாறியிருக்கிறது.
பிஎஃப் தொகையை தொழிலாளர்கள் பெறுவதற்கு விண்ணப்பித்தால் 3 நாள்களுக்குள் அந்த நடைமுறை நிறைவடைகிறது என்றும், மொத்தத் தொகையில் 95 சதவீதம் வரை ரொக்கமாகக் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் கூடுதல் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் பணத்தை பெற என்னென்ன விதிகள்..
பணி ஓய்வுபெறும்போது
இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில்லாமல் இருந்தால்.
நிரந்தரமாக வெளிநாடு செல்லும்போது
வேறு காரணத்துக்காக பணியிலிருந்த விலகும்போது இதுபோன்ற காரணங்களுக்காக தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தை முழுமையாகக் கோரிப் பெறலாம்.