யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தை! ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள்!
யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தைகளில் ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள் நடைமுறை.
நிதி நடவக்கைகளில் ஜூன் 15ஆம் தேதி பல்வேறு புதிய மாற்றங்கள், விதிமுறைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இது வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வோர், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பை உறுதி செய்தல், உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு ஒத்துழைப்பு போன்றவற்றுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வரி மற்றும் வரி விலக்கு
Advertisement
Advertisement
மிக முக்கியமான விவரம் என்னவென்றால், முன்கூட்டியே செலுத்தும் வரியின் முதல் தவணைக்கான காலக்கெடுதான். அதாவது, ஜூன் 15-ஆம் தேதிக்குள், ரூ.10,000-க்கு மேல் மதிப்பிடப்பட்ட ஆண்டு வரி செலுத்துவோர், 2026-27-ஆம் நிதியாண்டிற்கான முன்கூட்டிய வரி (advance tax) செலுத்தும் முறையின் முதல் தவணையை செலுத்திவிட வேண்டும்.
இந்தத் தவணைத் தொகையானது, புதிய வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் 2026-ன் கீழ் கணக்கிடப்படும். உரிய நேரத்தில் முன்கூட்டியே வரி தவணையை செலுத்தத் தவறினால், மாதத்திற்கு 1 சதவிகிதம் என்ற விகிதத்தில் வட்டி விதிக்கப்படலாம்.
பழைய வரி முறையைப் பின்பற்றி வரி செலுத்துவோர், மேம்படுத்தப்பட்ட சில வரி விலக்குகளைப் பெறவிருக்கிறார்கள்.
அதன்படி, குழந்தைக் கல்விப் படிக்கான வரி விலக்கு வரம்பு ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ரூ.100-லிருந்து ரூ.3,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது; அதேவேளையில், கல்வி நிலைய விடுதிக் கட்டணத்தின் படிக்கான (Hostel Allowance) விலக்கு மாதத்துக்கு ரூ.9,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்கள் புதிதாக 50 சதவிகித வீட்டு வாடகைப்படி (HRA) விலக்கு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன; இது இந்த நகரங்களில் வாடகை வீட்டில் வசிக்கும் சம்பளம் பெறும் ஊழியர்களின் வரியை மிச்சப்படுத்தும்.
பங்குச் சந்தைகள்
'ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்' (F&O) பிரிவில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
செபியின் 50:50 மார்ஜின் (margin) கட்டமைப்பு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருகிறது. இனி வர்த்தகர்கள் தங்கள் மார்ஜின் தேவைகளில் குறைந்தது 50 சதவிகிதத்தை ரொக்கம் அல்லது ரொக்கத்திற்கு இணையான ஆவணங்கள் வடிவில் வைத்திருக்க வேண்டும். இது பிணையமாக வைக்கப்பட்ட பங்குகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பணப்புழக்கத் தேவைகளை (liquidity requirements) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
கிரெடிட் கார்டு
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிமுகப்படுத்தும் புதிய யுபிஐ உறுதிப்படுத்தும் வசதி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானதாக மாறிவிடும்.
க்யூஆர் குறியீடுகள் அல்லது மொபைல் எண்கள் மூலம் பணம் செலுத்தும் பயனர்கள், பரிவர்த்தனையை முடிப்பதற்கு முன்பு, அந்த வங்கிக் கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ அவரது பெயரை காட்டும். இதன் மூலம் மோசடி, தவறான பணப்பரிமாற்றம், ஆள்மாறாட்ட மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வருங்கால வைப்பு நிதியையும் யுபிஐ அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் பயனர்கள் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ஜூன் முதல் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் வெகுமதி புள்ளிகளில் சில மாற்றங்கள் வருகின்றன.
அதாவது, கோடக் மஹிந்திரா வங்கி, பயன்பாட்டுக் கட்டணங்களுக்கான வெகுமதிப் புள்ளிகளுக்கு வரம்பு நிர்ணயித்துள்ளதுடன், கடன் அட்டைகள் மூலம் செலுத்தப்படும் வாடகை மற்றும் கல்விக் கட்டணங்களுக்குக் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவிருக்கிறது.
பரோடா வங்கி, தனது ஒன் கோ-பிராண்டட் கடன் அட்டைக்கான வட்டி விகிதத்தை ஜூன் 23 முதல் மாதத்திற்கு 3.49 சதவிகிதத்திலிருந்து 3.75 சதவிகிதமாக உயர்த்துகிறது.
ஐசிஐசிஐ வங்கி, அமேசான் பே கடன் அட்டைகள் மூலம் செய்யப்படும் வாடகைக்கான கட்டணங்களுக்கு 1 சதவிகித வெகுமதிப் பலனை ஜூன் 18 முதல் நிறுத்துகிறது.
ஜூன் 25 முதல், எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.100-க்கு மேல் அனுப்பும் யுபிஐ பணப்பரிமாற்றமும் ரூ.500-க்கு அதிகமான தொகையை பெறும்போது மட்டும் எஸ்எம்எஸ் பெறுவார்கள்.
New regulations regarding UPI, credit cards, taxes, and the stock market come into effect from June 15.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.