9/11-ல் நடந்த உயிர்காக்கும் போர்! தரையில் அமெரிக்க விமானங்கள்! கல்லீரலுடன் பறந்த ராணுவ விமானம்!!
2001ஆம் ஆண்டு செப்.11 தரையில் அமெரிக்க விமானங்கள்.. குழந்தையின் உயிரைக் காக்க நடந்த போர் பற்றி..
செப்டம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் கரீனா என்ற இளம் பெண்ணும் டென்னஸ்ஸி உடல் உறுப்பு தான சேவை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜில் கிராண்டஸ் சந்திப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்பின் காரணமாக மிகச் சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஜில் கிரேண்டஸ், 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி, பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்க மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. உலகமே அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, ஜில் கிரேண்டஸ், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மனநிறைவோடு அமர்ந்திருந்தார்.
செப். 3ஆம் தேதி டென்னசி உடல் உறுப்பு நன்கொடையாளர் சேவைகளின் தலைமை செயல் அதிகாரி ஜில் கிராண்டாஸை பார்த்து புன்னகைத்தபடி வந்த கரீனா என்ற இளம் பெண்ணை, கிராண்டாஸ் கட்டியணைத்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.
Advertisement
Advertisement
அவர்கள் இதற்கு முன்பு, ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை. ஆனால், உதவி எனும் ஒரு இழை, இவர்களை இணைத்திருந்தது. அதுவும் அவர்களது நாடு ஒரு தேசிய துயரத்தை எதிர்கொண்டிருந்த அதே நாளில்.
2001, செப். 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் பயணிகள் விமானத்தைக் கொண்டு மோதச் செய்து, மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கையாக அமெரிக்க விமானங்கள் அனைத்தும் தரையிறங்க உத்தரவிடப்பட்டது. அமெரிக்க வான் பரப்பு வெறிச்சோடியது. இது நடந்தது பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், அதற்கு முந்தைய நாளில், அமெரிக்காவில் பிறந்த குழந்தை சில நிமிடங்களில் மரணமடையும் நிலையில், அதன் கல்லீரல் மட்டுமே உடல் உறுப்பு தானத்துக்கு பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டது. ஹூஸ்டனில் செப். 11ஆம் தேதி குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரீனா என்ற ஆறு மாத குழந்தைக்கு கல்லீரல் தேவைப்பட்டது. அதனை உடனடியாக விமானம் மூலம் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. திடீரென நடந்தது பயங்கரவாதத் தாக்குதல். விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
எப்படி இந்த உடல் உறுப்பு தானத்தை மேற்கொள்ள முடியும். தேசிய பேரிடர் நாளில், ஒரு விமானத்தை எவ்வாறு கொண்டு வர முடியும் என ஆயிரம் கேள்விகள். ஒரே பதில் ஆம். முடியும். அதைச் சொன்னவர்தான் ஜில் கிராண்டஸ்.
ஒருவேளை, இந்த உடல் உறுப்பு தானத்தை மேற்கொள்ளாவிட்டால், ஒரு குழந்தையைக் கொன்றவர்களாகிவிடுவோம் என்பதே உடல் உறுப்பு நன்கொடை அமைப்பின் நிலைப்பாடும்.
தொலைபேசியில் எண்களை சுழற்றுகிறார் கிராண்டஸ். நாஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்தை அணுகுகிறார். அவர் எதிர்பார்த்ததோ முடியாது என்ற பதிலை. ஆனால், விமான நிலைய நிர்வாகம் தரப்பில் உடனடியாக டென்னஸி தேசிய விமானப் படைத் தலைமைக்கு தகவலை சொல்கிறார்கள். உடனடியாக அனுமதி கிடைக்கிறது. அவசர கால பேரிடர் குழு விமான நிலையம் அடைகிறது. சி-130 என்ற ராணுவ சரக்கு விமானம் தயாராகிறது. பல ஆயிரக்கணக்கான எடைகொண்ட சரக்குகளை எதிர்பார்த்த அந்த விமானத்துக்குள் ஒரு சிறு பெட்டி அதுவும் 100 கிராம் எடைக்கும் குறைவான ஒரு கல்லீரலை சுமந்து கொண்டு வெறிச்சோடிய வானில் பறந்தது.
நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், உயிர்காக்கும் கல்லீரலுடன் நாஷ்வில்லிலிருந்து ஹூஸ்டனுக்குச் சென்றது. அங்கு மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர்.
கரீனாவுக்கு அந்தக் குட்டி கல்லீரல் பொருத்தப்பட்டது. அவரும் நன்கு உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தங்களுடைய இழப்பிலும் மற்றொரு குழந்தை உயிரைக் காப்பாற்ற நினைத்த பெற்றோர் ஒரு பக்கம் நிம்மதியமைந்தனர்.
அனைவரும் அவரவர் வேலையில் பல ஆண்டுகள் கழிந்தன. ஆனால் ஆண்டுதோறும் செப். 11ஆம் தேதி கரீனா, கிராண்டாஸை போனில் அழைத்துப் பேசுவாராம்.
சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின் இளம்பெண் கரீனா - கிராண்டஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.