முகப்பு
தினமணி கதிர்

உழவுக்கு  வழிகாட்டும்..!

செல்போனில் விவசாயிகள் தொடர்பு கொண்டால்,  வேளாண் துறையில் உள்ள சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் கிடைக்கின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

செல்போனில் விவசாயிகள் தொடர்பு கொண்டால்,  வேளாண் துறையில் உள்ள சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் கிடைக்கின்றன. இந்தப் பணியை 'எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்'  மேற்கொண்டிருக்கிறது. 
'ஹெல்ப்லைன்' எனப் பெயரிடப்பட்டுள்ள வசதியில், 99422 11044, 72999 35543 என்ற இரு செல்போன் எண்கள் இருக்கின்றன. 2008-ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் சேவையில், நாளொன்றுக்கு சுமார் 20 அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
அழைப்பு வந்தவுடன் பிரச்னையைக் கேட்டறிந்து, அதற்கேற்ப அறிஞர், ஆய்வாளர், வேளாண் பணியாளருக்கு 'கான்பிரன்ஸ் கால்' போட்டு இணைக்கின்றனர். கேள்வியை நேரடியாகக் கேட்டு பதில் பெறலாம்.
இதுதவிர, 'வேளாண் தகவல் சேவை' என்ற பெயரில் 5 வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்குகின்றன.  ஒவ்வொரு குழுவிலும் சுமார் 400 விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள்.  தங்களின் பயிரில் ஏற்படும் குறைகள், பிரச்னைகளை போட்டோ எடுத்து, வீடியோ எடுத்தும் இந்தக் குழுவில் பகிர்ந்து தீர்வு கோருகிறார்கள்.
அதிகபட்சம் ஒரே நாளில் அதே குழுவில் குறிப்பிட்ட அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லப்பட்டு வருகிறது. இந்தச் சேவை  2018-ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது.

ஆர்.ராஜ்குமார்.


விருப்பமுள்ள விவசாயிகளின் எண்களுக்கு தினமும் அந்தந்தக் காலத் தேவைக்கேற்ப குரல் வழித் தகவல் பகிரப்படுகிறது. 
இந்தத் தகவல் மூலமாக,  பொதுவான வேளாண் ஆலோசனைகள், அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் சென்றடைகின்றன. இந்தக் குரல்வழி சேவை ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடைகின்றன. இவை அனைத்தும் இலவசமாகவும், தரமான தகவல்களாகவும் இருக்கின்றன.
இதுகுறித்து முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் கூறியது:
"எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு புதுக்கோட்டை, பூம்புகார், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் கள அலுவலகங்கள் உள்ளன.
இந்தச் சேவை புதுக்கோட்டையில் இருந்து தொடங்கப்பட்டது என்றாலும், தற்போது தமிழ்நாடு முழுமைக்குமே விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதேபோன்ற சேவைகளை எங்களின் அஸ்ஸாம்,  ஒடிஸா மாநிலக் கள அலுவலகங்கள் மூலமாகவும் வழங்கி வருகிறோம்.
பூச்சியியல், நோயியல், மண்ணியல். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் என 10 வகையான அறிஞர்கள், நிபுணர்கள், அரசு வேளாண் அலுவலர்களும் இப்பணிகளுக்கு முற்றிலும் இலவசமாகவே பதில்களை வழங்கி உதவுகின்றனர்.
'கான்ப்ரன்ஸ் கால்' இணைப்பைக் கொடுக்கும் எங்கள் பணியாளர்களும் விவசாயிகளின் பிரச்னைகளையும் அதற்கு கொடுக்கப்படும் பதில்களையும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இதன் மூலம் ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் பொதுவான பிரச்னைகள், திடீரென ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகள், அது எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது என்பன போன்ற ஆய்வையும் மேற்கொள்ள வசதியாக இருக்கிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments