உலக அளவில் புகழ் பெற்ற பல இடங்கள் நமது நாட்டிலேயே உள்ளன. அவை ரசித்து வியக்கத்தக்க அளவில், சிறந்த சுற்றுலாத் தலங்களாகவும் விளங்கி வருகின்றன:
குல்மார்க்- ஜம்மு-காஷ்மீர்
பனி மூடிய சிகரங்கள், பசுமையான புல்வெளிகள், புகழ் பெற்ற கோண்டேலா, பூக்களின் பள்ளத்தாக்கு, பனிச்சறுக்கு... என்று பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்தப் பகுதியை 'சுவிஸ் ஆல்ப்ஸ்க்கு மாற்று' என்பர். குளிர்கால விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற இடம்.
அந்தமான்
வங்காள விரிகுடாவில் உள்ள யூனியன் பிரதேசம். ஈரமான, பசுமையான காடுகள்.550 தீவுகளில் 28-இல் மட்டுமே மனிதர்கள் வாழ்கின்றனர்.
கஜ்ஜியார் - ஹிமாச்சல் பிரதேசம்
மலை வாசஸ்தலம். அடர்ந்த பைன் மரங்கள். வனப் பகுதிகளால் சூழப்பட்ட ஒரு சிறிய அழகிய சாசர் (கப்) வடிவ பூமி. பசுமையான இடம். நகர நுழைவு வாயிலில் 'மினி சுவிட்சர்லாந்து' என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, உலகில் 160 'மினி சுவிட்சர்லாந்துகள்' கண்டுபிடித்து, அங்கீகாரம் பெற்றுள்ளன.
ஆலப்புழா - கேரளா
இதனை 'கிழக்கின் வெனீஸ்' என அழைப்பர். படகு பந்தயங்கள், காயல் விடுமுறைகள், கடற்கரைகள், கடற்பொருள்கள். ஆலப்பழாவின் காயல்களில் படகு வீடுகள் போன்றவை பிரசித்தி பெற்றவை. படகு வீடுகளில் ஸ்டார் ஹோட்டல் அறைகளைப் போன்ற வசதிகள் உள்ளன.
நைனிடால் - உத்தரகண்ட்
குமா கோட்டத்தில் நைனிடால் மாவட்டத்தின் தலைநகர். 1,938 மீட்டர் உயரமுடையது. ஊரின் அழகே கண் வடிவ ஏரியாகும். மார்ச், ஏப்ரலில் பனிக்கட்டி மழை பெய்யும். காலையில் வெயில் அடித்தாலும், இரவு நல்ல குளிர்ச்சி நிலவும். இமயமலையின் பெரும் பனிச் சரிவுகளை இங்கு காணலாம். பனிச் சறுக்கு விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற இடம். இதனை இங்கிலாந்து ஏரி மாவட்டத்துடன் அழகுக்கு ஒப்பிடுவர். நவம்பர்-மார்ச் குளிர்காலம், பனி, மூடுபனி, மழை என சுகமான இடம்.
ரான் ஆஃப் கட்ச் - குஜராத்
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பரந்து விரிந்துள்ள பகுதி. பெரும் பகுதிகள் உப்பு சதுப்பு நிலங்கள்தான். பாலைவனத் தாவரங்களை மட்டுமே இங்கு காணலாம். இங்கு 147 மில்லியன் டன் உப்பு உள்ளதாம்.
இதனை அமெரிக்காவின் .வட மேற்கு யூட்டா வில் உள்ள டூலே கவுண்டியில் உள்ள பொன்னே வில்லே சால்ட் பிளாட்ஸ் பூமியுடன் ஒப்பிடுவர்.
துலிப் கார்டன் - ஸ்ரீநகர்
ஹாலந்தின் துலிப் கார்டன்களுடன் ஒப்பிடுவர். இங்கு எழுபது வகையான துலிப் மலர்கள் மலர்கின்றன. ஆசியாவின் மிகப் பெரிய துலிப் தோட்டங்களில் இதுவும் ஒன்று. 'இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம்' என இதற்கு பெயர் சூட்டியுள்ளனர். மார்ச் மாத கடைசி வாரத்திலிருந்து ஏப்ரல் இறுதி வாரம் வரை பூத்துக் குலுங்கும்.
மாலத் தீவுகள்
தெளிவான நீர். பசுமையான மலைகள்,தாவரங்கள் கடற்கரைகள் பவளப் பாறைகள் என பல சிறப்புகள்உண்டு. பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள நாடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.