முகப்பு
தினமணி கதிர்

எப்பிறப்பில் காண்பேன் இனி...

தெ.ஞா. என்ற ஈரெழுத்து ஒருமொழி இளையோர்க்குச் சொல்வது 'தெளிந்த ஞானத்தைப் பெறுங்கள்' என்பதாகும்.

Updated On : 2 பிப்ரவரி 2026, 8:17 pm IST
பகிர்:

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்

தெ.ஞா. என்ற ஈரெழுத்து ஒருமொழி இளையோர்க்குச் சொல்வது 'தெளிந்த ஞானத்தைப் பெறுங்கள்' என்பதாகும்.

உண்மை, உழைப்பு, நேர்மை, எளிமை, புலமை, சான்றாண்மை இவற்றின் ஒட்டுமொத்த உருவமே பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்களாவார்.

Advertisement

Advertisement

கடமை தவறாதவர்; கண்ணியம் மிக்கவர்; கட்டுப்பாடு உடையவர். தான் ஒழுங்காகப் பணியாற்றுவது போலவே பிறரும் பணியாற்ற வேண்டும் என எதிர்பார்த்தவர். அதுவே அவருக்குப் பலரைப் பகையாக்கியது.

மிகச்சிறந்த ஆசிரியர். தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் மிகுபுலமை பெற்றிருந்தார். ஒருமுறை நானும் அவரும் கல்கத்தா தமிழ்ச்சங்கத்தில் (1994) ஐந்து நாள்கள் பேசச் சென்றிருந்தோம். நிறைவு விழாவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுவோர் நிறைந்திருந்ததால் மகாகவி பாரதியாரைப் பற்றி ஆங்கிலத்தில் பேசவேண்டும் எனக்கேட்டுக் கொண்டனர்.

அடுத்த நிமிடமே ஒரு மணிநேரம் மகாகவி பாரதியாரைப் பற்றி ஆங்கிலத்தில் சொற்பெருக்காற்றினார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.

அவருடைய பண்புகளுள் ஒன்று பொருள் விரும்பாமை. அவர் தலைமையில் பல பட்டிமன்றங்கள் பேசியுள்ளேன். பேசி முடிந்தவுடன் விழா ஏற்பாட்டாளர் பணம் வைத்துள்ள கவரை நீட்டுவார். பேராசிரியர் தெ. ஞா. அவர்கள் 'அரங்கம் நீங்க வாங்குங்க'' என்பார்.

திரும்பும் போது, 'அரங்கம் கவரைப் பிரித்து அதில் உள்ள (1000 ரூபாய் இருக்கும்) பணத்தை ஏழாகப் பிரித்துக் (பட்டிமன்றப் பேச்சாளர்கள் 6 பேர், நடுவர் 1) கொடுத்துவிடுங்கள்.'' என்பார். தொகை குறைவாக இருந்தால், 'எனக்கு வேண்டாம்; நீங்கள் அறுவரும் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்பார்.

'அரங்கம்... அரங்கம்'' என்று அன்பொழுக அழைப்பார். ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் வாழ்ந்துகாட்டிய பெருமகன். பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்களிடம் அளப்பரிய மதிப்பு வைத்திருந்த பேராசிரியர் தெ.ஞா. அவர்கள், மு.வ. அவர்களைப் போலவே வாழ்ந்து மறைந்தார்.

உழைப்பால் உயர்ந்தார். பண்பால் சிறந்தார். அன்பால் அனைவரையும் ஆட்கொண்டார். சான்றோர் பெருந்தகையாக வாழ்ந்த பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்களை எப்பிறப்பில் காண்பேன் இனி...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments