குரங்கும் மத்தளமும்...
இரண்டு பாணர்கள் ஆளுக்கொரு மத்தளத்துடன் நடந்து கொண்டிருந்தார்கள். முகம் களைத்து உடல் களைத்து காலில் வலி கண்ட ஒரு பாணன் கேட்டான்.
இரண்டு பாணர்கள் ஆளுக்கொரு மத்தளத்துடன் நடந்து கொண்டிருந்தார்கள். முகம் களைத்து உடல் களைத்து காலில் வலி கண்ட ஒரு பாணன் கேட்டான்.
'இன்னும் எவ்வளவு தொலைவு நடக்க வேண்டும்?''
இன்னொரு பாணன், 'அதோ அந்த மேட்டைத் தாண்டிவிட்டால் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மன்னனைப் பார்க்கலாம்'' என்றான்.
Advertisement
Advertisement
'அந்த மேட்டைக் கடக்க வேண்டுமா?'' என்ற மற்றொரு பாணனின் பதிலில் சலிப்பும் கவலையும் மிதந்தது. முன்னே போன பாணன் முழுமனிதனாய் பதில் சொன்னான்... 'நடக்கவும் சோம்பேறித் தனமானால் வாழ்க்கையில் எதுவும் நடக்காது.''
'அது சரி, நாம் இவ்வளவு தொலைவு நடந்து போகிறோமே மன்னர் நமக்கு ஏதாவது தருவாரா?'' என்ற கேள்வியை பின்னால் நடந்த பாணன் தொடுத்தான். முன்னால் நடந்த பாணன் அதைக்கேட்டு அப்படியே நின்று சொன்னான்.
'தன்னைத் தேடி வந்தவர்களுக்கு இல்லை யென்னாது தருகிற வள்ளல் நம் மன்னன் ஆய்வேள். அவன் புகழ் எட்டுத்திக்கும் பரவியுள்ளது. ஒரு புலவர் சூரியனே! உன்னால் எம் போன்றவர்களுக்கு ஏதாவது வழங்க முடியுமா? முடியாது! பின் ஏன் எதற்காக வானிலிருந்து வீணே ஒளியை வீசுகிறாய் என்று பாடியிருக்கிறார். உனக்கு ஏன் வீண் சந்தேகம். வந்து பார்.''
அவர்கள் இருவரும் அந்த மேட்டைக் கடந்து ஒரு ஊருக்கு வந்தார்கள். அந்த ஊரில் இரு பாணர்களும் ஓய்வு எடுத்தார்கள். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மத்தளங்களை பலாமரத்தில் கட்டித் தொங்கவிட்டார்கள். பிறகு அவர்கள் கண்மூடித் தூங்கினார்கள்.
பலாமரத்தருகே வந்த குரங்கு மத்தளத்தைப் பலாப்பழம் என நினைத்து கையால் தட்டியது. அவ்வளவுதான் ஓசை எழுந்து அதிர்ந்தது. அதைக்கேட்ட அன்னப்பறவைகள் பயந்து நடுங்கி அலற அடித்துக்கொண்டு பறந்தன. சிறுசிறு குருவிகள் வேறு எங்கோ பறந்தன. குரங்கோ வழக்கமாகப் பலாப்பழத்தைத் தட்டினால் பழம் கிடைக்குமே! இங்கே சப்தம் வருகிறதே! என எண்ணியவாறு ஓடியது. அப்புறம்தான் இரு பாணனும் விழித்துப் பார்த்தார்கள்.
மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல்தொடி ஆஅய் மழைதவழ்
பொதியில்;
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே!
(புறநானூறு-128)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.