அழகிய ரயில் பயணம்!
ஜப்பானின் இயற்கை அழகை ரசிக்க ரயில் பயணம்தான் சிறந்தது.
ஜப்பானின் இயற்கை அழகை ரசிக்க ரயில் பயணம்தான் சிறந்தது. இங்குள்ள கியோட்டோவின் புறநகர்ப் பகுதியான அரஷியாமா- கமேயோகா இடையே இயக்கப்படும் 'சாகனோ ரொமான்டிக் ரயில் பயணம்' உலகின் மிக அழகான பயணமாக உள்ளது. 6.4 கி.மீ. (4 மைல்) தூரமுள்ள இந்த ரயில்பயணத்தின்போது, ரயில் மெதுவாக ஊர்ந்து 25 நிமிடங்களில் கடக்கும்.
பள்ளத்தாக்குகளின் வழியே வளைந்து நெளிந்து செல்வதாக இருந்தாலும், பிரமிக்க வைக்கும் கடற்கரைகளை ஒட்டிச் செல்வதாக இருந்தாலும், பருவகால வனப்பகுதிகளில் அழகைக் கடந்து செல்வதாக இருந்தாலும், ரயில் பயணம் இனிய சாகசமாக அனுபவமாக மாறிவிடுகிறது. அதனால்தான் 'இன்ஷூர்அன்ட் கோ' எனும் அமைப்பினர் நடத்திய ஆய்வில் 'சாகனோ ரொமான்டிக் ரயில் பயணம்' சிறந்ததாக அமைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பயணம் புகழ் பெற்ற ரயில் பயணங்களான பெர்னியா எக்ஸ்பிரஸ், க்ளாஸியேர் எக்ஸ்பிரஸ், வெஸ்ட் ஹை லேண்ட் லைன் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
Advertisement
ரயில் பயணத்தின்போது மக்கள் ஒரு காட்சியை எவ்வளவு விரைவாகக் கவனிக்கிறார்கள், எவ்வளவு நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அளவிடும் 'கண்' கண்காணிப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு அமைந்திருந்தது. இவ்விரண்டு
அளவீடுகளையும் இணைத்து, சாகனோ வழித்தடம் 100-க்கு 91.9 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
'ஹோசுகாவா' ஆற்றைப் பின்தொடர்ந்து செல்லும் இந்தப் பயணத்தின்போது, இருபுறமும் மலைகள், செங்குத்துப் பாறைகள், வனப்பகுதிகளைக் காணலாம். ரயில் பெட்டிகள் கண்ணாடி இழைத் தகடுகளால் வேயப்பட்டிருப்பதால் பக்கவாட்டுப் பகுதிகள், கூரை வழியாகவும் காட்சிகளைக் காணலாம். புகைப்படங்களையும் எடுக்கலாம். முற்றிலும் திறந்தவெளிப் பெட்டியான ஐந்தாம் எண் பெட்டியில் ஜன்னல்களோ கூரையோ இல்லை. இது பயணிகள் தென்றலை உணரவும், கீழே ஓடும் ஆற்றின் ஓசையைக் கேட்கவும், நிலப்பரப்பின் தடையற்ற புகைப்படங்களை எடுக்கவும் அனுமதிக்கிறது.
வசந்த காலத்தில் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்குவதையும், கோடையில் ஓடும் ஆற்றுடன் அழகாக முரண்படும் அடர் பச்சை நிற வனப்பகுதிகளையும், இலையுதிர் காலத்தில், பள்ளத்தாக்கு சிவப்பு, தங்க நிற இலைகளின் கண்கவர் கலவையாக மாறுவதையும் காணலாம். அதேசமயம் குளிர்காலம் மரங்களையும் ஆற்றங்கரைகளையும் பனியால் மூடுகிறது.
இந்தப் பருவகால மாற்றங்களானது இப்பயணத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அனுபவிக்கத் தகுந்ததாக ஆக்குகின்றன. திறந்தவெளிப் பெட்டியில் பயணிக்க விரும்பினால் முன் பதிவு மிகவும் அவசியம்.