நாட்டின் சுத்தமான நகரம்!
நகரில் எச்சில் துப்பினால் அபராதம், தண்ணீர் பாட்டில்களையும் பேப்பர் கப்புகளையும் சாலையில் எறியக் கூடாது...
நகரில் எச்சில் துப்பினால் அபராதம், தண்ணீர் பாட்டில்களையும் பேப்பர் கப்புகளையும் சாலையில் எறியக் கூடாது, பொது இடங்களில் கழிவுகளைக் கழித்தால் அபராதம், பிளாஸ்டிக்கை எரிப்பவர்களுக்கும் அபராதம், இரவு நேரங்களில் குப்பைகளை தெருவோரத்தில் கொட்டினால் அபராதம் என்ற நடைமுறைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அமலில் இருக்கின்றன. சாலையின் இருபுறங்களிலும் காமிராக்கள் கண்காணிக்கின்றன.
அதேநிலைமை கேரளத்துக்கு உள்பட்ட வயநாட்டின் சிறிய மலைநகரமான சுல்தான்பத்தேரியில் உள்ளதால், 'இந்தியாவின் சுத்தமான நகரம்' என்ற பெருமையைத் தாங்கியுள்ளது.
கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 9-இல் வாக்குப் பதிவு நடக்கும் வரை இந்த நகரின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், கம்பங்களில் இருந்த விளம்பரப் பதாகைகள் அடுத்த நாளே அப்புறப்படுத்தப்பட்டன. சுவர்களில் வர்ணம் பூசப்பட்டு, பளிச்சிட்டன. பழைய தூய்மையான சுல்தான்பத்தேரியாக மீண்டும் அவதரித்தது.
Advertisement
Advertisement
திப்பு சுல்தான் தனது படைகளுடன் இந்த இடத்தை ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தியதால், 'சுல்தான் பேட்டரி' என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் 'சுல்தான்பத்தேரி' என்று மருவியது.
வயநாட்டின் ரம்மியமான சிறிய மலைநகரமான சுல்தான்பத்தேரிக்கு எந்தத் தெருவின் வழியாகச் சென்றாலும், அவற்றின் இருபுறமும் தொட்டிகளில் வைக்கப்பட்ட பூச்செடிகள் வரிசையாக இருக்கும். குப்பைகளோ, துர்நாற்றமோ நகரில் அறவே இருக்காது. இந்தத் தூய்மை நிலையைத் தொடர்ந்து பேணிக்காக்க பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுப்புகளைச் செயல்படுத்தியவர் அதன் முன்னாள் தலைவர் சி.கே. சகாதேவன்.
சாதனைகள் என்னென்ன?
நகரில் உள்ள 13 வடிகால்களில் பல முப்பது ஆண்டுகளுக்கும் மேல் குப்பைகளால் அடைபட்டுக் கிடந்தன. பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீது பரவலான தடையை நகராட்சி மன்றம் அமல்படுத்தியது.
பொதுச் சாலைகளின் ஓரங்களில் அடர்த்தியாக வளர்ந்து கிடந்த செடிகளும் மரங்களும் கத்தரித்து ஒழுங்கு செய்யப்பட்டன.
குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் பொருட்டு, நகராட்சி நிர்வாகத்தினர் ஒருசேர இரவு, பகல் பாராமல் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் இருந்தனர்.
ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு நகராட்சிப் பணியாளர்கள் குப்பை வண்டிகளுடன் பணிக்குத் தயாராகிவிடுகின்றனர். இவர்களது துப்புரவுப் பணி மூன்று மணி நேரத்துக்குள் நிறைவடைந்துவிடும் என்றாலும், மதிய வேளையில் இவர்கள் மீண்டும் ஒருமுறை நகரை வலம் வந்து, விடுபட்டிருக்கும் குப்பைகளை அகற்றுகின்றனர்.
அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் அவற்றுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகள், கொடிகள், பிற அலங்காரப் பொருள்களை முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்ற விதி இங்குள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பே மரக்கன்றுகளை நட்டு பராமரித்ததால், சுல்தான்பத்தேரி நகரம் முதலில் 'கேரளத்தின் பூங்கா நகர்' என்ற பெயரையும் பெற்றது.
பொதுக் கழிவறையில் மக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பதிவு செய்வதற்காக நகராட்சி நிர்வாகத்தால் 'வருகையாளர் பதிவேடு' வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏற்பாட்டைச் செய்த நாட்டின் ஒரே நகரம் சுல்தான்பத்தேரி.
கழிவு மேலாண்மையைச் செம்மைப்படுத்த வீடுகள், கடைகளிலிருந்தே நேரடியாகக் குப்பைகளை விலைக்கு வாங்கி உரம், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ளும் வகையில், ஜெர்மானியத் தொழில்நுட்பத்தின் வாயிலான கழிவு மேலாண்மை நிலையத்தை உருவாக்கியுள்ளது.
நோயாளிகளுக்கான இலவச மின்-ஆட்டோ சேவையை 'நூல்பூழா குடும்ப நல மையம்' வழங்குகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த இலவசப் போக்குவரத்துச் சேவையை நல மையத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.