அங்கிள் ஆன்டெனா
குழந்தைகள் வளர வளர முதலில் முளைத்த பற்கள், சிறிது காலத்துக்குப்பின் விழுந்து, புதிய பற்கள் முளைப்பதற்கு என்ன காரணம்?
கேள்வி: குழந்தைகள் வளர வளர முதலில் முளைத்த பற்கள், சிறிது காலத்துக்குப்பின் விழுந்து, புதிய பற்கள் முளைப்பதற்கு என்ன காரணம்?
பதில்: ஒரு குழந்தை கருவில் உருவாகி 6 வாரங்கள் இருக்கும்போதே பற்கள் உருவாக்கம் ஆரம்பித்துவிடும். குழந்தை பிறந்த பிறகும் இப்படி உருவாகியிருக்கும் பற்கள் வெளியே தெரியாமல் இருக்கும். சில காலம் கழித்து சற்றே இந்தப் பற்கள் வெளியே தோன்ற ஆரம்பிக்கும். இப்படி வரும் பற்களைத்தான் பால் பற்கள் (Milky Teeth) என்று அழைப்பார்கள்.
இந்தப் பற்களின் பயன்பாடு கொஞ்ச காலத்துக்குத்தான். குழந்தைகளின் தாடை வளர்ச்சிக்கும் வாயின் வளர்ச்சிக்கும் (குழந்தைக்குப் பின்னால் வரப்போகும் பற்களுக்கான இடத்தை முன்பதிவு செய்து வைப்பதற்கு) இந்தப் பால் பற்கள் உதவுகின்றன. இவற்றின் பயன்பாடு குழந்தை வாயில் கிடைக்கும் உணவைச் சவைப்பதற்கும் சுவைப்பதற்கும் பயன்படுகிறது. குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக பற்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளும். இந்தக் கற்கும் நிலை குழந்தையின் 6வது வயது வரை தொடரும்.
Advertisement
இதில் இன்னொன்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பால் பற்களுக்கு அவ்வளவாக வேர் இருக்காது. இந்தப் பற்களின் அடிப்பாகத்தில் புதிய பற்களுக்கான குருத்துகளும் ஏற்கனவே இருக்கும். இது இயற்கையின் அதிசயம்.
இந்தப் பால் பற்களின் பயன்பாடு குழந்தையின் 6 வயதுக்குள் முடிந்து விடுவதால், புதிய பற்கள் தோன்றி நன்றாக வேர் விட்டு வளர ஆரம்பிக்கும். இதனால் பால் பற்கள் விழுந்து விடுகின்றன.
சில குழந்தைகளுக்கு இந்தப் பற்கள் சீக்கிரம் விழுந்து விடுவதும்கூட உண்டு.