FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

நினைவாற்றலில் அசத்தும் ஒன்றரை வயதுச் சிறுமி!

நாட்டின் எதிர்காலம் மட்டுமின்றி, மாற்றத்துக்கான சக்தியாகவும் குழந்தைகள் மிளிர்கிறார்கள்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 4:00 am IST
பகிர்:

நாட்டின் எதிர்காலம் மட்டுமின்றி, மாற்றத்துக்கான சக்தியாகவும் குழந்தைகள் மிளிர்கிறார்கள். சில நேரங்களில் அவர்களின் செயல்பாடுகள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

பல குழந்தைகள் தங்களின் அபாரமான, அசாத்திய திறமைகளால் கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், பல சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார் கோவையைச் சேர்ந்த ஒன்றரை வயதுச் சிறுமி லாஷினி.

கோவை மாவட்டம், கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் அபிலாஷ் - லோக ஜனனி தம்பதியின் மகள் லாஷினி. இவர் பிறந்து ஆறு மாதம் கடந்தவுடன் வீட்டில் உறவினர்கள் பேசுவது, செய்வதைக் கவனித்து அதேபோலப் பேசுவது, செய்வது என மழலைக்கே உரித்தான முறையில் இருந்தது. இதைக் கவனித்த குழந்தையின் தாய் மேலும் சொல்லிக் கொடுக்க, குழந்தையும் அறிந்து மீண்டும் சொன்னது. சில வார்த்தைகளைத் திரும்பச் சொல்வது, படங்களைக் காட்டினால் கவனித்துச் சொல்வதைக் கண்டு வியப்படைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக லோகஜனனி கூறியதாவது:

'குழந்தையின் நினைவாற்றல், அறிவுக்கூர்மையை மெருகேற்றும் வகையில் 9 மாதங்கள் எட்டியவுடன், மேலும் சில வார்த்தைகள், பொருள்கள் அறியும் வகையில், வீட்டின் அறை முழுவதும் எண்கள், ஆங்கில எழுத்துகள், பறவைகள், விலங்குகள் உள்பட பல்வேறு படங்களை ஒட்டி மழலை வகுப்பறையைப் போன்று மாற்றினேன். வெளியே செல்லும்போது அங்கு பார்ப்பது, மற்றவர்கள் பேசுவதை எல்லாம் கேட்பார்.

குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும்போது பறவைகள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், வாகனங்கள், நிழல்படங்கள், உடல் உறுப்புகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக அடையாளம் கண்டு கூறுவதுடன் எண்கள், தமிழ் மற்றும் ஆங்கில மழலைப் பாடல்களை மறக்காமல் ஒப்பிப்பார். இந்தத் திறனை அறிந்து மேலும் வலு சேர்க்கும் வகையில் தினமும் லாஷினியிடம் 15 நிமிஷங்கள் செலவழித்தேன். எதையும் கட்டாயப்படுத்தவில்லை. அவருக்குப் பிடித்தது என்ன என்பதை அறிந்து, அதை மட்டும் செய்தேன். ஒரு கட்டத்தில் அவரின் வயதுக்கு மீறி அவளாகவே பார்த்தவை, கேட்டவற்றைக் கூறுவார். சில நேரங்களில் நாங்கள் எதையோ பாடினால், அவரும் எங்களுடன் பாட ஆரம்பித்துவிடுவார்.

குழந்தைகளின் திறன்களை அங்கீகரிக்கும் வகையில் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து இணையதளத்தில் தேடியபோது, சாதனைப் புத்தகங்கள் குறித்து அறிந்தேன்.

விருதுகள்

அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, குறைந்தது 180 வார்த்தைகளை குழந்தை சொல்ல வேண்டும் என்று கூறினர். விண்ணப்பித்தவுடன் தேர்வின்போது நிழல் படங்கள் 45, பாடல்கள் 7, எண்கள் 10, பழங்கள் 23, காய்கறிகள் 11, விலங்குப் பொம்மைகள் 18, வாகனங்கள் 10, செயல் வார்த்தைகள் 16, உணவு வகைகள் 9, உடல் உறுப்புகள் 10, படத்தைக் காட்டியவுடன் குறிப்பிட்ட 3 பறவைகளின் குரல்போலச் செய்துகாட்டியது, 4 விலங்குகளின் படங்களைக் கண்டு அவற்றின் குரல்போலச் செய்து காட்டியது, பொதுவானவை 164 என மொத்தம் 384 வார்த்தைகளைக் கூறி லாஷினி அசத்தினார்.

கலாம்'ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகம் உள்ளிட்ட பல சாதனைப் புத்தகங்களிலும், பல அமைப்புகளின் விருதுகளை லாஷினி பெற்றுள்ளார்.

குழந்தைகளின் சாதனைக்குப் பின்னால் பெற்றோரின் ஊக்கமும், வழிகாட்டுதலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் வளர்ப்பதே அவர்களின் வெற்றிக்கு அடித்தளம்'' என்கிறார் லோகஜனனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments