சினி மினி
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் படத்தின்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதத்துக்கும் மேல் முடிந்துவிட்டது. இருப்பினும் படத்துக்கு என்ன பெயர் வைப்பது என தல உள்பட படக்குழுவினர் அனைவரும் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல தமிழ்ப் பெயராகவும் அதேசமயம் அஜித்தின் இமேஜுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும் எனக் கூறி சில தமிழ் ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறாராம் இயக்குநர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு "துப்பாக்கி' படத்தில் தான் சொந்தக் குரலில் பாடிய "கூகுள் கூகுள்...' பாடல் ஹிட் ஆகியுள்ளதால் இனி அடுத்தடுத்த படங்களில் சொந்தக் குரலில் பாட முடிவெடுத்துள்ளார் விஜய். இயக்குநர் விஜய் இயக்கத்தில் அமலாபாலுடன் நடிக்கும் புதிய படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் விஜய். இந்தப் படத்தில் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லனாக அறிமுகமாகிறார்.
தனுஷ் நடிக்கும் "காமத் அண்ட் காமத்' மலையாளப் படத்தின் தொடக்க விழா மூன்று நாள்களுக்கு முன்பு கொச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கையோடு தனுஷும் அவருடைய மகன் யாத்ராவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். பின்னணிப் பாடகர் ஜேசுதாஸின் மகனும் பாடகருமான விஜய் ஜேசுதாஸýம் தனுஷுக்கு உதவியாக இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றார்.
Advertisement
நான் யாருடன் பழகினாலும் அந்த உறவு நீடிப்பதற்கு முன்பே பல பிரச்னைகளால் குழப்பம் ஏற்படுகிறது; வதந்திகளைத் தவிர்ப்பதற்காக என் தங்கைக்கு திருமணம் முடிந்தவுடனேயே நானும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் சிம்பு.
பிரபுதேவா இயக்கத்தில் ஹிந்திப் படமொன்றில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனை தெலுங்கிலும் ஹிந்தியிலும் பல முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதையடுத்து தெலுங்கில் மூன்று, ஹிந்தியில் இரண்டு என ஐந்து மெகா பட்ஜெட் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இதனால் தமிழ்ப் பட வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறார் ஸ்ருதி.
நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கிறார்; இளம் நடிகர்களுடன் நடிக்க மறுக்கிறார் என அஸின் பற்றி பாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது குறித்து கேட்டால்... ""இருபது, நாற்பது, அறுபது வயது ஹீரோ என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. எத்தனை வயதானால் என்ன ஸ்டார் ஹீரோவா என்று பார்த்துதான் படங்களை ஒப்புக்கொள்கிறேன். அப்போதுதான் இண்டஸ்ட்ரியில் நீடிக்க முடியும்'' என்கிறார் அஸின்.
தான் நடிக்கும் "சமர்' படத்தில் கட்டாயமாக சொந்தக் குரலில் டப்பிங் பேச வேண்டும் என படத்தின் நாயகி த்ரிஷாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நாயகன் விஷால். இதையடுத்து த்ரிஷா சொந்தக் குரலில் பேசியுள்ளார். ஐம்பதாவது படத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் த்ரிஷா இதற்கு முன்பு "ஆய்த எழுத்து', "மங்காத்தா', "மன்மதன் அம்பு' ஆகிய படங்களில் மட்டுமே சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்ட சூழ்நிலையில் அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார் நமீதா. மாநிலக் கட்சிகளில் இணைவதை விட தேசியக் கட்சியில் இணைவதுதான் நல்லது என்ற முடிவில் இருக்கிறாராம். தாமரை கட்சியில் இணையவே அதிக வாய்ப்பு. அதனால் பேச்சு தொடர்கிறதாம். இணையும்பட்சத்தில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரசாரம் செய்யவும் முடிவெடுத்திருக்கிறாராம்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "சிங்கம் 2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் பரபரப்பாக முடிவடைந்து இருக்கிறது. அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தாலும் படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரை அணுகியிருக்கிறார்கள். அவர்கள் மறுத்துவிடவே பெரிய தொகைக்கு அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில் ராஜீவ்காந்தியின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் பிரவேசம், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் இறந்தது போன்றவை படத்தில் இடம் பெறுகின்றன. பாவ்னா தல்வர் இயக்கும் இந்தப் படத்தில் ராஜீவ் காந்தி வேடத்தில் நடிக்க அபிஷேக் பச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்துக்காக சோனியா காந்தியின் ஒப்புதலைப் பெற கதை, திரைக்கதை, நடிகர்கள் பற்றிய முழு விவரங்களும் அவருடைய உதவியாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது. சம்மதம் கிடைத்தால் உடனே படப்பிடிப்பு தொடங்கி விடும் என்கிறது இயக்குநர் வட்டாரம்.