முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்: பருத்திவீரனுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை?

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள ஈரம் காயாத கதைகள்' புத்தக வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 7 ஜூன் 2026, 4:10 am IST
பகிர்:

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள ஈரம் காயாத கதைகள்' புத்தக வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியபோது, என் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் நடக்காமல் போனதில் வருத்தம் உண்டு. ராம் படத்துக்காக நான் விருது வாங்கினேன். வழக்கமாக இப்படி விருது வாங்கும் போது பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறேன் எனச் சொல்லி, அவர்களிடம் கொடுப்பார்கள். ஆனால் அந்தச் சூழல் எனக்கு அமையவில்லை.

அடுத்து பருத்திவீரன்' படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என நம்பினேன். அப்போது அதைப் பெற என் அம்மாவை அழைத்துப் போக வேண்டும் என இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அன்றைய காலகட்ட அரசியலால் எனக்கு விருது கிடைக்கவில்லை. அதனால் என் அம்மாவை விருது வாங்க வைக்கும் ஆசை நிறைவேறாமல் போனது' என்றார்.

இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவரிடம், அரசியல் ரீதியாக பவர் ஃபுல்லான போயஸ் கார்டனில் வசிக்கும் உங்கள் மகன் தனுஷ் அரசியலுக்கு வருவாரா?' என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம். அதற்கான தகுதிகளை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.' என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்துக்கு இணையத்தில் பரவிய விமர்சனங்கள், படத்துக்குக் கிடைக்க வேண்டிய வரவேற்பைத் தடுத்திருக்கிறது எனக் குறிப்பிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், இணையத்தில் பரவிய கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக, தியேட்டர்களில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது என்று பலர் எனக்கு மெசேஜ் செய்திருந்தனர். சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு தப்பிப் பிழைத்து விடுகின்றன. தங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டுவதற்காக எழுதப்படும் விமர்சனங்கள், ஒரு படத்தை விவாதிப்பதையும் தாண்டி, பார்வையாளர்கள் அந்தப் படத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதையே தடுத்து விடுகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.