FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்போம்

நாட்டில் உள்ள கலைகளில் தப்பாட்டம், கரகாட்டம், பறையிசையெல்லாம் தொன்றுதொட்டு வரும் கலைகள்.

19 செப்டம்பர் 2026, 8:20 pm IST
பகிர்:

பொ.ஜெயச்சந்திரன்

நாட்டில் உள்ள கலைகளில் தப்பாட்டம், கரகாட்டம், பறையிசையெல்லாம் தொன்றுதொட்டு வரும் கலைகள். திருவிழாக்கள், சுப, துக்க நிகழ்வுகள் போன்றவைகளில் கலைஞர்கள் இன்றும் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருப்பார்கள். தற்போது கேரளத்தின் செண்டை மேளம், வட இந்திய பேன்ட் வாத்தியம், திரைத்துறையின் ஆடல், பாடல், இன்னிசைக் கச்சேரி போன்றவற்றை கிராம மக்கள் விரும்புகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை வரவழைத்து, கிராமங்களில் நிகழ்வுகளை நடத்துகின்றனர். இதனால் இளம்தலைமுறையினர் பாரம்பரியக் கலைகளை அறிவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. ஆகவே, பாரம்பரியக் கலைகளையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கவேண்டும்'' என்கிறார் தஞ்சாவூர் மண்டல கலை, பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குநராக இருக்கும் ம.இராஜாராமன்.

Advertisement

Advertisement

அரசின் பல்வேறு பணிகளிலும், தளங்களிலும் பணியாற்றிய இவர் சீட்' அறக்கட்டளையின் பயிற்சி மைய முன்னாள் இயக்குநர், இந்திய பொது நிர்வாகக் கழகச் செயற்குழு உறுப்பினர், இந்திய அதிகாரிகள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்று பல பதவிகளையும் வகித்தவர். அவருடன் பேசியபோது:

சிறுவயது முதலே நூலகத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவேன். தமிழ் மொழியை சரியாக, அழகாக, நேர்த்தியாக உச்சரிப்பது அந்த மொழிக்கே அழகு. ஆகவே, சென்னையில் போட்டித் தேர்வுக்குத் தயாராகிறபொழுது, தூர்தர்ஷனில் தமிழ் செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆள்களைத் தேர்வு செய்வதாக விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன்.

5 ஆயிரம்பேர் கலந்துகொண்ட தேர்வில் ஒவ்வொரு படியாக உச்சரிப்பு, மொழி என 7 வகையான தேர்வுக்குப் பின்னர் நான் உள்பட 5 பேர் தேர்வானோம்.

நேரலையில் செய்திகளை வாசிக்கின்றபொழுது, எந்தத் தவறுக்கும் இடம் அளிக்காமல் நேர்த்தியாக வாசித்தாக வேண்டியது கட்டாயம். செய்தி வாசிப்பது எனக்குள் பல்வேறு மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

வாழ்க்கைப் பாடம்

ஆசிரியர் பயிற்சி முடித்து, 2005 ஆகஸ்ட் 1-இல் ஆசிரியர் பணி தொடங்கியது. அதிலிருந்து, பின்னர், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தயாரிப்பு, தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளர் பணி, பேரிடர் மீட்புப் பணி, வருவாய் ஆய்வாளர், தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு, அறநிலையங்கள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி பிரிவு அலுவலர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்துவிட்டு கடந்த ஓராண்டுக் காலமாக தஞ்சாவூர் மண்டலத்தின் மண்டல உதவி இயக்குநராகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

எந்தப் பணியாக இருந்தாலும், யாருக்கெல்லாம் உதவி தேவையோ அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுகின்ற ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கலைப்பண்பாட்டுத் துறைக்கு வந்தவுடன் 7 மாவட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

இளங்கலை, முதுகலை பொது நிர்வாகம் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் பயின்றே 2011-ஆம் ஆண்டில் நெட் தேர்விலும், ஜெ.ஆர்.எஸ்.தேர்விலும் தேர்ச்சி பெற்றேன்.

ஆசிரியர் பணி அறப்பணி

20 ஆண்டு ஆசிரியர் பணிக்காலத்தில் நான் மிகவும் ஆழமாகவும், நேர்மறைச் சிந்தனையுடனும் ஒரு சிறப்பான, திருப்தியான வாழ்வு வாழ்ந்தேன்.

அரசர்கள் வேடத்தில் நான் பாடம் நடத்தியபோது, மாணவர்களின் மனதில் பதிந்து அழகாக நடித்துக் காட்டினார்கள். மாணவர்களுக்கு எந்த வகையில் கற்பித்தால், எளிதாகப் புரியுமோ அந்தவிதத்தில் கற்பிக்கும் கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. செயல்வழிக் கற்றல் முறையை தீவிரமாக அமல்படுத்தி அனைவரையும் தேர்ச்சிபெறச் செய்தேன்.

கதை சொல்லுதல், பண்பாட்டு விழுமியங்களான விருந்தோம்பல், பாரம்பரிய உடைகளை மாணவர்களை அணிந்துவரச் செய்தல் என மொழி, பண்பாட்டின் மீதான ஆர்வத்தையும் தொடர்ந்து உருவாக்கினேன்.

தமிழை நவீனத்தோடு இணைத்துக் கொள்ள

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழியான தமிழ், இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் தமிழ்ப் பாடம் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்தில்தான் கற்றுத்தருகிறார்கள். இதனால் தமிழ் மொழியின் மீதான ஆர்வமும், ஈர்ப்பும் அவர்களுக்கு வெகுவாகக் குறைந்து விடுகிறது.

ஆகவே தமிழ் இலக்கியத்துக்காக வகுப்புகள் நடத்தவேண்டும். நூலகத்தில் மாணவர்களை அமரச்செய்து, படிக்கவைத்து, அதன்மூலம் போட்டிகள் நடத்தி அவர்களுக்குப் பரிசுகள் வழங்கவேண்டும். ஒரு மொழி நம்மை ஆட்கொள்கிறபோது, அதில் மூழ்கி முத்தெடுப்போம். ஆகவே, நூலகத்தில் தரமான படைப்புகளை வாசிக்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments