முகப்பு
தமிழ்மணி

"ஞானச் செருக்கு' எனும் மதயானை!

ஆன்ம கோடிகள் உய்யுமாறு வேதாகமப் பொருளைத் திருமந்திரம் என்ற ஞான நூல்வழி காட்டியருளிய திருமூலர் மரபில் வந்த அருளாளராகிய மெளனகுரு சுவாமிகளால், திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தாயுமானவர் ஆட்கொள்ளப்பட்டார்.

Updated On : 22 ஜனவரி 2017, 1:54 am IST
பகிர்:

ஆன்ம கோடிகள் உய்யுமாறு வேதாகமப் பொருளைத் திருமந்திரம் என்ற ஞான நூல்வழி காட்டியருளிய திருமூலர் மரபில் வந்த அருளாளராகிய மெளனகுரு சுவாமிகளால், திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தாயுமானவர் ஆட்கொள்ளப்பட்டார்.
 மெளன குரு சுவாமிகளால் தீட்சை அருளப்பெற்ற தாயுமான சுவாமிகள், தன் ஞானாசிரியரான மெளன குருவின் பெருமைகளையும், அவர் தமக்கு ஞான உபதேசம் செய்த பான்மையையும் விதந்து பாடியுள்ளார். அவை "மெளனகுரு வணக்கம்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்
டுள்ளன.
தாயுமானவர் தன் ஞானாசிரியராகிய மெளன குரு தம்மை ஒரு ஞான மத்த ஜகமென வளர்த்ததாகப் பெருமித்துடன் கூறுகிறார். யானை என்பதே கம்பீரத்தின் அடையாளம் - பெருமையின் அடையாளம். ஆனால், பொதுவாக யானை எவர்க்கும் கட்டுப்படாது. எனினும், நுட்பம் அறிந்தவர் அதனை அங்குசத்தால் அடக்கி விடலாம்.
ஆன்மா எனும் யானை, ஆசை என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆங்காரம் என்ற முளைக் குச்சியில் அது கட்டப்பட்டுள்ளது. பாச இருளைத் தன் நிழல் என நினைத்து, ஆரவாரம் செய்து, தன் மனத்தையே பெருங்கவள உணவாக உண்கிறது. யானையின் முகப்படமாக இருப்பது மாயை. அத்துவித மென்கின்ற மதத்தை மேற்கொண்டு, ஆறு மதங்களும் (உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பாட்டசாரியம்- இவை புறச்சமயங்களாகும்) ஆறு நதிகளாக துதிக்கையில் நுரையாகச் செய்து உறிஞ்சித் தன்மீதே தெளித்துக் கொள்கிறது யானை. இவ்வாறு விரும்பியவாறெல்லாம் எவ்விதக் கட்டுப்பாடும் நெறிமுறையும் இன்றிச் செயல்படும் தன்னை - யானை எனத் திகழும் ஆன்மாவை - ஒரு யானைப் பாகனாக வந்து அங்குசத்தால் (சின்முத்திரையாகிய ஞானமுத்திரையால்) அடக்குவது போல மெளன குரு தம்மை ஆட்கொண்டார் என்று தாயுமானவர் கூறுகிறார். அப்பாடல் வருமாறு:

""ஆசைநிக ளத்தினை நிர்தூளி படவுதறி
யாங்கார முளையையெற்றி
அத்துவித மதமாகி மதமாறு மாறாக
அங்கையின் விலாழியாக்கிப்
பாசவிரு டன்னிழ லெனச்சுளித் தார்த்துமேற்
பார்த்துப் பரந்தமனதைப்
பார்த்த கவளவாய்ப் பூர்க்க உண்டுமுக
படாமன்ன மாயைநூறித்
தேசுபெற நீவைத்த சின்முத் திராங்குசச்
செங்கைக்கு ளேயடங்கிச்
சின்மய னந்தசுக வெள்ளம் படிந்துநின்
திருவருட் பூர்த்தியான
வாசமுறு சற்சார மீதென்னை ஒருஞான
மத்தகஜ மென வளர்த்தாய்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மெளனகுருவே'' (பா.1)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.