அமெரிக்கா: சீக்கியர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது
கலிபோர்னியா மாகாணம் மான்டேகாவில் வசித்து வரும் சீக்கியர் சாஹிப்சிங் நாத் (71) கடந்த திங்கள்கிழமை நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருடன் 2 மர்ம நபர்கள் தகராறில் ஈடுபட்டதுடன் சரமாரியாக தாக்கினர்.
கலிபோர்னியா மாகாணம் மான்டேகாவில் வசித்து வரும் சீக்கியர் சாஹிப்சிங் நாத் (71) கடந்த திங்கள்கிழமை நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருடன் 2 மர்ம நபர்கள் தகராறில் ஈடுபட்டதுடன் சரமாரியாக தாக்கினர். இதேபோல, கடந்த 31ம் தேதி கலிபோர்னியாவில், சீக்கியரான சுர்ஜித்மால்ஹி (50) என்பவரையும் மர்ம நபர்கள் தாக்கியிருந்தனர். இதுகுறித்து, மான்டேகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சாஹிப்சிங் நாத்தை தாக்கியதாக கலிபோர்னியாவின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் டை ரோன் மெக் அலிஸ்டர் (18) என்பவரையும், 16 வயதான சிறுவன் ஒருவரையும் வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கைது குறித்து விசாரணை அதிகாரி செர்ஜியன்ட் மில்லர் கூறுகையில், சாஹிப்சிங் நாத் மீது தாக்குதல் நடந்த வீதியில் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பொது மக்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, தனது மகன் டை ரோன் மெக் அலிஸ்டர், கூடாநட்பால் கொடூரமான குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும், இதனால் மனம் வெறுப்படைந்து தனது மகனை சில மாதங்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக, மூத்த காவல்துறை அதிகாரியான டாரில் மெக்அலிஸ்டர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, கடந்த 31ம் தேதி தாக்குதலுக்குள்ளான சீக்கியரான சுர்ஜித்மால்ஹி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்டேனிஸ்லஸ் கவுண்டியை சேர்ந்த குடியரசு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெஃப் டென்ஹாம் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இரு தாக்குதல் சம்பவங்களும் வெறுப்பின் காரணமாக நடந்திருப்பதாக கருதுவதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாத வகையில் அரசு துணை நிற்க வேண்டும் என்றும் சீக்கிய கூட்டமைப்பு, அரசை வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.