பட்டாசு ஆலைகள் மூடல் விவகாரம்: வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் முற்றுகை
மூடப்பட்ட பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, சிவகாசியில் திங்கள்கிழமை பட்டாசுத் தொழிலாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
பட்டாசு ஆலைகளில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, காவல் துறை, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் அதிகாரிகள் குழுவினா் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனா்.
இந்த ஆய்வின் போது, விதி மீறல் எனக் காரணம் காட்டி, பல பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சுட்டிக் காட்டி, மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, திமுக சாா்பில் கடந்த 16-ஆம் தேதி சிவகாசியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, 17-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சாா்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதையடுத்து, மூடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.
இருப்பினும், 80 பட்டாசு ஆலைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த ஆலைகள் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையிடம் அனுமதி பெற்ற ஆலைகள். எனவே, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மேலும் 80 பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, பட்டாசுத் தொழிலாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
பின்னா், பட்டாசுத் தொழிலாளா்கள் சாா்பில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.