நடுரோட்டில் ஆளுநருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்: எங்கு தெரியுமா?
கிரிஸ் நாட்டின் நகர ஆளுநர் ஒருவருக்கு பொதுமக்கள் நடு வீதியில் தர்ம அடி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தசலோனிகி: கிரீஸ் நாட்டின் நகர ஆளுநர் ஒருவருக்கு பொதுமக்கள் நடு வீதியில் தர்ம அடி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிரீஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இருப்பது தசலோனிகி. இந்த நகரத்தின் ஆளுநராக யின்னிஸ் போட்டரிஸ் (73) என்பவர் பதவி வகித்து வருகிறார். யின்னிஸ் போட்டரிஸ் பொதுவாகவே தேசியவாத எதிர்ப்பு கருத்து நிலைப்பாடு கொண்டவர். இதன் காரணமாக அவரது கருத்துக்களுக்கு குறிப்பிட்ட குழுக்களிடையே எதிர்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட கிரேக்க நாட்டு மக்களுக்கு நினைவு செலுத்தும் விழாவானது, தசலோனிகி நகரில் நடைபெற்றது. இதில் நகர ஆளுநர் என்ற முறையில் யின்னிஸ் போட்டரிஸ் கலந்து கொள்ள வந்திருந்தார்.
அவரது வருகை பற்றித் தகவலறிந்தவுடன் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமாக அங்கு வந்து ஆளுநர் யின்னிஸ் போட்டரிஸை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். நிலை தடுமாறி அவர் கீழே விழுந்த பின்னரும் தாக்குதல் தொடர்ந்தது. பின்னர் போலீசாரால் மீட்கப்பட்ட ஆளுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆளுநர் கூறியதாவது:
இது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு. பொதுமக்கள் தாக்கியதில் நான் நிலை குலைந்து போனேன். என் உடல் முழுவதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.